முகப்பு
மகளிர்மணி

பறவை ஆர்வலரான ஆசிரியை!

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடாவில் உள்ள காளி நதியையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில்பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஹார்ன் பில் என்ற பறவை இனம் ஏராளமாக உள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடாவில் உள்ள காளி நதியையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில்பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஹார்ன் பில் என்ற பறவை இனம் ஏராளமாக உள்ளன. இது தவிர இந்தியன் ராபின் உள்பட பல்வேறு இனப் பறவைகளுடன், ஜூன் மாதத்தில் வெளிநாடுகளிலிருந்தும் பறவைகள் இங்கு வந்து தங்கிச் செல்வதுண்டு. இதையொட்டி டான்டெலி மற்றும் ஜோய்டா ஆகிய நகரங்கள் உள்ளன.

பறவைகள் ஏராளமான அளவில் வருவதால் இயற்கை மற்றும் பறவை ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்திருப்பதால் வனத்துறையினர் மற்றும் தனியார் ஹோம் ஸ்டே விடுதிகளும் இங்கு உள்ளன.

ராம் நகரம் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாக இருந்த ரஜனிராவ் என்பவருக்கு, கல்லூரி நாட்களிலிருந்தே பறவை கண்காணிப்பில் ஆர்வம் அதிகமிருந்தது. அது தொடர்பான கருத்தரங்கங்கள், பயணங்கள் போன்றவைகளில் பங்கேற்பதுண்டு. பறவைகள் பற்றிய பல அரிய தகவல்களை சேகரித்து வந்த ரஜனி ராவ், டான்டெலி மற்றும் ஜோய்டா வனப்பகுதியில் உள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட பறவைகளை கண்காணிப்பதோடு பறவைகளின் இனவிருத்தி, குஞ்சுகளைப் பாதுகாப்பது, அவைகளின் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து வைத்திருந்தார். கூடவே வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் பற்றியும், அவை எந்தெந்த நாடுகளிலிருந்து குறிப்பிட்ட பருவங்களில் வருகின்றன என்ற தகவல்களையும் சேகரித்துள்ளார்.

பள்ளி ஆசிரியையாக இருந்தபோது, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், பறவை கண்கணிப்பு ஆகியவைகளின் ஆர்வமூட்டும் வகையில் சுற்றுலா அழைத்துச் செல்வதுண்டு. ஒரு கால கட்டத்தில் பறவை கண்காணிப்பில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக ஒன்பதாண்டுகளாக பணியாற்றி வந்த ஆசிரியை வேலையை ராஜிநாமா செய்துவிட்டு டான்டெலி, ஜோய்டா வரும் பறவை ஆர்வலர்களுக்கு முழுநேர வழிகாட்டியாக பணியாற்ற முடிவு செய்தார்.

இதற்காக வனத்துறை யினரிடமும் அனுமதி பெற்றார். இதன் மூலம் கர்நாடகாவில் பறவை கண்காணிப்பு வழிகாட்டிகளில் முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றார். ஏற்கெனவே மாணவர்களை பறவை கண்காணிப்பு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற அனுபவம் இருந்ததால், பறவை கண்காணிப்பில் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கினார். இரண்டு மணிநேர பயணத்தில் அங்குள்ள பறவைகளை பற்றிய பெயர்கள், வாழ்க்கைமுறை, வெளிநாட்டு பறவை களின் வருகை போன்ற தகவல்களை ரஜனிராவ், விளக்கிக் கூறுவது இயற்கை ஆர்வலர்களிடையே பிரபலமாயிற்று.

பறவை கண்காணிப்பில் ஒரே ஒரு பெண் வழிகாட்டியாக உள்ள ரஜனி ராவ், இயற்கை மற்றும் சுற்றுச் சூழலில் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சியளித்து குழுக்களாக அமைக்க திட்டமிட்டுள்ளார். "ஹோம் ஸ்டே' விடுதி உரிமையாளர்களும், வனத்துறையினரும் இவருக்கு ஆதரவாக இருப்பதால் சுற்றுலா பயணத்திற்கு தேவையான வசதிகளையும் செய்து தருகின்றனர்.

டான்டெலி வனப் பகுதியில் உள்ள டிம்பர்யார்டில் ஜூன் மாதத்தில் அதிகமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்குவதால், அந்தப் பருவத்தில் இங்கு வரும் பறவை ஆர்வலர்கள் அதிகரித்துள்ளனர். வழிகாட்டியாக இருப்பதோடு பறவைகள், சுற்றுச் சூழல் போன்ற கருத்தரங்கங்களையும் நடத்த தனியாக பறவை கண்காணிப்பு பகுதியொன்றையும் அமைக்க ரஜனிராவ் உத்தேசித்துள்ளார். இந்தப் பணியில் ஆர்வமுடன் ஈடுபட வருபவர்களுக்கு அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை அன்பளிப்பாக வழங்கினால், மேலும் பல பறவை கண்காணிப்பு வழிகாட்டிகள் உருவாவதோடு, சுற்றுலா பயணிகள் வருகையால் வருவாய் அதிகரிக்கும் என்று கூறுகிறார் ரஜனிராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.