சமயல்! சமயல்!
சவேராவின் மால்குடி ரெஸ்டாரெண்ட்டில் செட்டிநாடு உணவுத் திருவிழா தொடங்கியுள்ளது.
மகளிர்மணிசமயல்! சமயல்!
சவேராவின் மால்குடி ரெஸ்டாரெண்ட்டில் செட்டிநாடு உணவுத் திருவிழா தொடங்கியுள்ளது.
சவேராவின் மால்குடி ரெஸ்டாரெண்ட்டில் செட்டிநாடு உணவுத் திருவிழா தொடங்கியுள்ளது. கடந்த 6-ஆம் தேதி முதல் வருகிற 22 -ஆம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் பல்வேறு வகையான செட்டிநாடு உணவுகளின் வகைளை சுவைக்க முடியும். அங்கு பரிமாறப்படும் சில உணவுகளின் செய்முறை இங்கே உங்களுக்காக..
சிவப்பு அரிசி பணியாரம்
தேவையானவை :
சிவப்பு அரிசி - ஒரு கிண்ணம்
பொடித்த கருப்பட்டி - அரை கிண்ணம்
சுக்குத்தூள் - 1 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.
செய்முறை: சிவப்பு அரிசியை ஊறவைத்து, பின் உலர்த்தி மிக்ஸியில் கட்டியில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் பொடித்த கருப்பட்டியை வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு பாகுக் காய்ச்சிக் கொள்ளவும். அதனுடன், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர், அரைத்து வைத்துள்ள அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். பின்னர் மாவை 2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் எடுத்து, குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் அல்லது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும். சத்தான, சுவையான கருவை அரிசி பணியாரம் ரெடி.
கள்ள வீட்டு அவியல்!
தேவையானவை:
கத்திரிக்காய் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
தேங்காய் - அரை மூடி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: கத்திரிக்காய், உருளைக்கிழங்கைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சிறு சிறு துண்டாக நறுக்கவும். பின்பு சோம்பு, தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து அதில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும். தோசை. சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
வெண்டைக்காய் மொச்சை மண்டி
தேவையானவை:
வெண்டைக்காய் - அரை கிலோ
தக்காளி - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 3
காய்ந்த மிளகாய் - 3 (அல்லது)
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 3 பல்
மொச்சைப் பயறு - 50 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையானளவு
செய்முறை: வெண்டைக்காயை கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். முன்னதாக மொச்சைப் பயறை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும். வெண்டைக்காய் பாதியளவு வெந்ததும் மொச்சைப் பயறைச் சேர்த்து கொதித்ததும் இறக்கவும். சுவை மிகுந்த வெண்டைக்காய் மொச்சை மண்டி தயார்.
பருப்பு கோலா உருண்டை குழம்பு
தேவையானவை:
கடலைப் பருப்பு –- 200 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சீரகம், சோம்புத்தூள் - தலா ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - தாளிக்க
செய்முறை: கடலைப் பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் இரண்டு மணிநேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பாதிஅளவு வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து மிகப் பொடியாக நறுக்கவும். இவற்றை அரைத்த பருப்புடன் சேர்த்து உருண்டை பிடித்து இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளிப் போட்டு கிரேவியாக வரும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதனுடன் சோம்பு, சீரகத்தூள் சேர்த்து கிளறவும். பின்னர் புளியை கரைத்து ஊற்றவும். இதனுடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தேங்காயை மையாக அரைத்து ஊற்றவும். நன்கு கொதி வந்தவுடன் ஒவ்வொரு உருண்டையாக போட்டு வேக விடவும். பருப்பு உருண்டைக் குழம்பு தயார்.