முகப்பு
மகளிர்மணி

பன்முகப்  பண்புகளை  வளர்க்கும்  கோவீட்!

ஊரடங்கு காலத்தில்  வீட்டுக்குள் இருந்து பலருக்கும் மூச்சு   முட்டும்  நிலைக்கு வந்துவிட்டார்கள். பெரியவர்கள் இப்படி என்றால் சிறார்கள் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்..! 

Updated On : 15 மே, 2020 at 4:47 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:08 PM


ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருந்து பலருக்கும் மூச்சு முட்டும் நிலைக்கு வந்துவிட்டார்கள். பெரியவர்கள் இப்படி என்றால் சிறார்கள் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்..!

வெளியே போய் விளையாட முடியாது. பூங்காவிற்குப் போக முடியாது... கடைகளுக்குச் சென்று விளையாட்டு சாமான்கள் வாங்க முடியாது.. இவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்திருக்கிறது "கோவீட்'. (CoVeed) கரோனாவின் இன்னொரு பெயரான கோவிட் -19 ன் சுருக்கம் தான் கோவீட் .

"கோவீட்' டில் பயனுள்ள வகையில் பொழுது போக்குதல், கற்பனை வளம், கலை நயப்பயிற்சி, சேமிக்கும் மனப்பான்மை, சேமித்ததை பிறருக்கு கொடுத்து உதவும் பக்குவம் எல்லாம் கலந்துள்ளதால் கரோனா காலத்தில் "கோவீட்' சமூக வலைத் தளங்களில் பிரபலமாகியுள்ளது.

Advertisement

சந்தையில் கிடைக்கும் "பால் பென்' (Ball pen) னுக்குப் பதிலாக, ரீஃபில்லை காகிதத்தில் கச்சிதமாகச் சுற்றி எழுதும் முனைக்கு எதிர் முனையில் ஒரு விதையை வைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வரும் லட்சுமி மேனன்தான் "கோவீடின்' பின்னணியில் இருப்பவர்.

இவர் வடிவமைத்த விதையுடன் கூடிய காகிதப் பேனா உலகம் முழுவதும் பேசப்பட்டது. தூக்கி எறியும் காகிதப் பேனாவில் இருக்கும் விதைகளில் பத்திற்கு ஒன்றாவது செடியாக வளரும் என்ற நம்பிக்கைதான் "பேனாவில் விதை' என்ற துவக்கத்திற்கு முதல் காரணமாக இருந்த லட்சுமி, கரோனா காலத்தில் நலிந்தவர்களுக்கு உதவும் மனோபாவத்தை சிறார்களிடம் வளர்க்க கோவீட் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

வீட்டில் சும்மா கிடக்கும் அட்டைப் பெட்டிகளைக் கொண்டு பலவித மாடல்களில் பத்து இருப்பது கோ- வீடுகளை உருவாக்கி, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கைப் பிடிக்கு அதிகமாகவோ குறைவாகவோ அரிசி, பருப்பு வகைகளைச் சேமித்து வர வேண்டும். 21 நாட்கள் நிறைவானதும், உணவுக்கு வழியின்றி இருக்கும் ஏழைகளுக்கு சேமித்த உணவுப் பொருள்களை வழங்கவேண்டும்.

இந்த நல்ல நோக்கத்தை சிறார்கள் மனதில் விதைக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக உருவானதுதான் கோவீட். கோவீட்களை உருவாக்குவதில் பெரியவர்களும் சிறார்களுக்கு உதவலாம் . கோவீட்களை செய்து அதன் படத்தை எங்களுக்கு அனுப்பி வைத்தால் நாங்கள் ஒவ்வொரு கோவீட் ஒன்றிற்கும் பத்து ரூபாய் வீதம் "சமூக சமையலுக்கு' அன்பளிப்பு செய்வோம்.

கரோனா காலத்தில் உணவு கிடைக்காமல் பட்டினி கிடைக்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு தயாரிக்க உதவும். கோவீட்கள் உருவாக்குவதை கரோனா காலத்துடன் நிறுத்திவிடக் கூடாது. வரும் காலத்திலும் வீட்டில் சிறார்கள் ஓய்வு நேரத்தை வீணாக்காமல் பன்முகப் பண்புகளை வளர்த்துக் கொள்ள கோவீட்களை உருவாக்க வேண்டும்.

அதனால் சிறார்களுக்கு கைவினைத் திறமையுடன் கற்பனைத் திறனும் மேம்படுவதுடன், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பக்குவமும் தோன்றும் . அது நாளைய உலகில் நலிந்தவர்களை மனித நேயத்துடன் அணுக கோவீட் உதவும்'' என்கிறார் லட்சுமி மேனன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.