தாய்மையில் வெண்பா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே அதிக ரசிகர்களைக் கொண்டு தனி இடம் பிடித்த தொடர் "பாரதி கண்ணம்மா'. இதில் நாயகி கண்ணம்மாவுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உண்டோ அதே அளவிற்கு வில்லி வெண்பாவாக நடித்து வரும் பரீனாவுக்கும் ரசிகர்கள் ஏராளம். இதன் காரணமாகவே, சமூக வலைதளங்களில் எப்போதும் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருப்பவர் பரீனா. இந்நிலையில், பரீனா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டார். மேலும், தான் தொடர்ந்து பாரதி கண்ணம்மாவில் நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். இதனால், அவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில், அவருக்கு, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உயிர்காக்கும் தம்பதிகள்!
கரோனா இரண்டாம் அலையின்போது, ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் தொற்றுக்கு ஆளானவர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் பிரபலங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்தனர். அந்த வகையில், சின்னத்திரை பிரபலங்களான அமித்பார்கவ், ஸ்ரீரஞ்சனி தம்பதியினர், கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கிக் கொடுக்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
இதற்காக தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதியை தேர்வு செய்து, அங்கு தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் உயிர்காக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, "கிரவுட் ஃபண்டிங்' தளம் ஒன்றை அமைத்து அதன் வாயிலாக, நிதி திரட்டி வருகின்றனர். அமித் பார்கவ் ஜீ தொலைக்காட்சியில் தற்போது சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஸ்ரீரஞ்சனி பாடகியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். அவ்வப்போது, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.