முகப்பு
மகளிர்மணி

ஆய்வுக் கட்டுரை... கிராமத்து மாணவிகள்!

கல்வி மற்றும் கல்வி சாராத செயல்பாடுகளில் கவனம் செலுத்தாத மாணவர்கள் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் கல்வியுடன் இணைந்து அறிவியல் சார்ந்த செயல்பாடுகளில் களப் பயணம் மேற்கொண்டு தேசிய அளவிலான போட்டிக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
பகிர்:


கல்வி மற்றும் கல்வி சாராத செயல்பாடுகளில் கவனம் செலுத்தாத மாணவர்கள் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் கல்வியுடன் இணைந்து அறிவியல் சார்ந்த செயல்பாடுகளில் களப் பயணம் மேற்கொண்டு தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்  கிராமத்து மாணவிகள். கடையநல்லூர் அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம் ரத்னா உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வ ரம்யா மற்றும் மணிமேகலை ஆகியோர் தான் இந்த சாதனைக்கு சொந்தக்கார மாணவிகள்.

இந்திய அரசின் தொழில்நுட்பத் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 28- ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இணையவழியில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து தேசிய அளவிலான போட்டிக்கு அவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அறிவியல் திறன்களை வளர்க்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. நிகழாண்டு கரோனாவினால் இணைய வழியில் இந்த அறிவியல் மாநாடு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்றது.

இளநிலை, உயர்நிலை, மேல்நிலை என பல்வேறு பிரிவுகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் இணைய வழியில் ஜனவரி 11-ஆம் தேதி மாவட்ட அளவில் நடைபெற்ற ஆய்வு கருத்தரங்கில் தமிழகம் முழுவதுமிருந்து 3000 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் மாணவிகள் செல்வரம்யா, மணிமேகலை ஆகியோர் சமர்ப்பித்த "சமூக பயன்பாட்டில் தேனீ வளர்ப்பு " என்ற அறிவியல் ஆய்வுக் கட்டுரை மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் தினகரன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திய கணிதவியல் ஆய்வு மைய விஞ்ஞானி ராமானுஜம் உள்ளிட்டோர் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைப் பரிசீலித்தனர். இதன்மூலம்  ஆய்வுக்கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வானது.

இதுகுறித்து மாணவிகள் செல்வரம்யா, மணிமேகலை ஆகியோர் கூறும்போது, ""எங்கள் பள்ளியின் நிர்வாகி பிரகாஷ் ,செயலர் மாடசாமி, தலைமையாசிரியை சக்தி வடிவு , வழிகாட்டி ஆசிரியை வள்ளிமயில்,  ஆகியோர் அளித்த ஊக்கம் தான் எங்கள் வெற்றிக்கு காரணம். எங்கள் ஆய்வுக் கட்டுரைக்காக கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் தேன் எடுப்பவர்களையும், ஊர்மேலழகியானில் உள்ள வேளாண் பயிற்சி மைய விவசாயிகளையும், கண்டுகொண்டான் மாணிக்கம் என்ற கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி வேலுச்சாமி உள்ளிட்டோரையும் சந்தித்து தேனீ வளர்ப்பு குறித்து கேட்டறிந்தோம். மேலும், தேனீ வளர்ப்பின் மூலம் கிடைக்கும் வருமானங்களையும் தெரிந்து கொண்டோம். அதை பரவலாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம்'' என்றனர். 

தேசிய அளவில் தேர்வு பெற்ற மாணவிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பாராட்டி கெளரவித்ததையும் மாணவிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

மொபைல் கேம்களில் நேரத்தை தொலைத்து, உடல் நலத்தையும், மன நலத்தையும் இழந்து வரும் மாணவர்கள் மத்தியில் களப்பயணம் மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து அசத்தியுள்ள மாணவிகள், இன்றைய இளைய தலைமுறைக்கு முன்னுதாரணம் என்றால் மிகையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.