முகப்பு
மகளிர்மணி

தமிழ் பெண்கள் சங்கத்தின் தலைவி!

தான் கற்றதையும் தான் பெற்றதையும் பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று நினைப்பவர்களில் மீனா குமாரி பத்மநாதனும் ஒருவர்.

Updated On : 26 மே, 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:48 AM

தான் கற்றதையும் தான் பெற்றதையும் பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று நினைப்பவர்களில் மீனா குமாரி பத்மநாதனும் ஒருவர்.  இவர் துபாய் தமிழ் பெண்கள் சங்கத்தின் தலைவியாக இருந்து வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து: 

""என்னுடைய சொந்த ஊர் தமிழ்நாட்டில் தென்காசி அருகிலுள்ள ஊர்மேலழகியான் என்ற சிற்றூர். என்னுடைய  படிப்பு எல்லாம் தூத்துக்குடியில் தான்.   தென்னிந்திய பிரசார சபா வழியாக நடத்தப்பட்ட தேர்வில் ப்ரவீன் உத்தார்த் முடித்து சான்றிதழ் பெற்றுள்ளேன். கிட்டத்தட்ட 26ஆண்டுகள் என்னுடைய கூட்டுக்குடியில் வாழ்ந்து இருக்கிறேன். 

கடந்த 1994-இல் எனது கணவர் பத்மநாதனோடு துபாயில் குடியேறினேன். அவர் இங்குள்ள பிரபல கடல் வணிகக் கம்பெனியில்  பொது முகமையாளர் பொறுப்பில் இருக்கிறார். 

Advertisement

நான் வந்த போது பாலைவன பூமியாக இருந்த துபாய் 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு அசுர வளர்ச்சியினைக் கண்டு உலக அரங்கில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது. இங்கே வந்தவுடன் துபாய் தமிழ் பெண்கள் சங்கத்திற்குள் நுழைந்தேன். இச்சங்கம் அரசின் அங்கீகாரம் பெற்றது. இச்சங்கம் மூலமாக நம் தமிழ்ப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கடல் கடந்தும் கட்டிக் காத்து அதை வளரும் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தருதல், இயல்,இசை, நாடகம் போன்ற பல்துறை ஞானத்தை ஊட்டுதல், குழந்தைகளுக்கு தமிழ் மொழி சொல்லி தருதல், ஆண்கள், பெண்களின் தனித் திறமைகளுக்குக் களம் அமைத்துத் தருதல், புது முகங்களோடு புதிய நட்பினை வளர்த்தல், இலக்கியம், மருத்துவம் போன்ற கருத்தரங்குகள் நடத்துதல், பண்டிகை கால விழாக்கள் கொண்டாடுதல் போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம். 

கரோனா காலகட்டத்தில் வேலையிழந்து வருமானம் இன்றி தவித்த அனைத்துத் தர வகுப்பு மக்களுக்கும் மளிகைப் பொருள்கள், உணவுப் பொட்டலம் வழங்குதல் மற்றும் ஆரோக்கியம் பேணும் அத்தியாவசியப் பொருட்கள் தருதல் போன்ற பணிகளை அரசுத் தொண்டு நிறுவனமான வத்தானி அல் இமாரத் பவுண்டேஷனுடன் இணைந்து செய்து வருகிறோம்.

இது தவிர என்னுடைய சொந்த முயற்சியில், பாரதி திருமகனின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி,  பாலாதேவி சந்திரசேகரின் நாட்டிய நாடகமான "கர்ணன்', "பிரகதீஸ்வரா' போன்ற படைப்புகளை இந்திய துணைத் தூதரகத்தில் நிகழ்த்தி நம் தமிழ் நாட்டுப் பாரம்பரியமிக்க நாட்டுப்புற கலைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மனம் பெருமிதம் கொள்கிறது. 

எனது பி.எஸ். அப்துர் ரஹ்மான் பெண்மையைப் போற்றிய தன்மை குறித்து எழுதிய "பெண்ணறிவின் பொன்னேடு பி.எஸ்.எ'  கட்டுரை திருச்சி சையத் எழுதிய நூலில்  வந்துள்ளது.

அதுபோன்று, பல்வேறு நாடகங்கள் எழுதி, இயக்கி தமிழ் பெண்கள் சங்கத்தில் அரங்கேற்றியுள்ளேன். "மரகத மாமியார்' என்ற முழுநீள நாடகம் எழுதி அதில் நடித்தும் இருக்கின்றேன்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.