பரங்கிக்காய் கீரை துவட்டல்
வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பரங்கிக்காயை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேவையானவை:
நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கிண்ணம்
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடி செய்ய:
பச்சரிசி - ஒரு கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மல்லி - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பரங்கிக்காயை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். பொடி செய்வதற்கு கொடுத்துள்ளவற்றில் அரிசியை மட்டும் வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய வேண்டிய மற்ற பொருட்களை வறுத்தெடுத்து ஆறவிடவும். ஆறியதும் வறுத்த அரிசியுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் வேக வைத்துள்ள பரங்கிக்காய் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். அதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை வதங்கியதும் தேவையான அளவு பொடியைச் சேர்த்து நன்கு பிரட்டி, பச்சை வாசம் போனவுடன் இறக்கவும். சுவையான பரங்கிக்காய் கீரை துவட்டல் தயார்.