கூடைப்பந்தில் சாதனை!
ஏழ்மை, தந்தையின் இறப்பு என வாழ்க்கையில் எவ்வளவோ சிரமங்கள் இருந்தாலும், தனது கடுமையான உழைப்பின் மூலம் இலக்கை எட்டி வருகிறார் தஞ்சாவூர் மாணவி ரக்ஷயா.
ஏழ்மை, தந்தையின் இறப்பு என வாழ்க்கையில் எவ்வளவோ சிரமங்கள் இருந்தாலும், தனது கடுமையான உழைப்பின் மூலம் இலக்கை எட்டி வருகிறார் தஞ்சாவூர் மாணவி ரக்ஷயா.
தஞ்சாவூரிலுள்ள புதுக்கோட்டை சாலை ராமகிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் இவர், தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். 15 வயதான இவர் கூடைப்பந்து போட்டியில் தேசிய அளவில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதுகுறித்து ரக்ஷயா நம்மிடம் பகிர்ந்தது...
அப்பா கண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அம்மா ராஜேஸ்வரிதான் பால் வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
""எங்களது வீட்டில் முதல் முதலாக இந்தக் கூடைப்பந்து விளையாட்டில் எனது அக்கா பவித்ரா விளையாடி வந்தார். அவர் பள்ளி அளவில் தமிழ்நாடு அணியில்
பங்கேற்று தேசியப் போட்டியில் விளையாடினார். அவர் விளையாடியதைப் பார்த்து எனக்கும் கூடைப்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. எட்டாம் வகுப்புப் படிக்கும்போது விளையாடத் தொடங்கினேன். அதிலிருந்து என் சிந்தனை முழுவதும் இந்த விளையாட்டின் மீதே இருந்து வருகிறது.
இதற்காக நாள் தோறும் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து, காலை 5.45 மணிக்கு மைதானத்துக்குச் சென்றுவிடுவேன். காலை 6 மணிக்கு தொடங்கி 8.30 மணி வரை விளையாடுவேன். அதன் பிறகும் ஓய்வுக்காக வீட்டுக்குச் செல்லமாட்டேன். நேராகப் பள்ளிக்குச் சென்றுவிடுவேன். மாலை 4.30 மணி வரை பள்ளிப் படிப்பு. பின்னர், மாலையில் நேராக மைதானத்துக்குச் செல்வேன். மாலை 4.45 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை விளையாடுவேன். அதன் பிறகு டியூசனுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டுக்குச் சென்றடைவேன்.
வீட்டுக்குச் சென்ற பிறகும் வீட்டுப் பாடம், அன்றைய பாடங்களைப் படிப்பது என இரவு 11.30 மணி வரை தொடரும். அதன் பிறகே படுக்கச் செல்வேன். இரவு வெகுநேரம் கழித்து படுத்தாலும், அதிகாலையிலேயே எழுந்துவிடுவேன்.
இந்தக் கடின உழைப்புதான் ஒடிசாவில் 2019 -ஆம் ஆண்டில் நடைபெற்ற 14 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய போட்டியில் தமிழ்நாடு அணியில் பங்கேற்று விளையாடி தங்கப் பதக்கத்தை வெல்ல முடிந்தது. இந்த வெற்றி என்னை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல ஊக்கமாக அமைந்துள்ளது.
என் அம்மா, குடும்பத்தினர், பள்ளி நிர்வாகம், பயிற்சியாளர் கே. கண்ணன், மாமன்னன் ராஜராஜசோழன் கூடைப்பந்து ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளையினர் ஆகியோர் அளித்து வரும் தொடர் ஆதரவு மூலம் இந்த லட்சியத்தை எட்டுவேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார் ரக்ஷயா.