புதிய பாடல்: நதியைப் பாரு தம்பி!
வீறு மிக்க வீரன் போல போகும் நதியைப் பாரு சேறு மிக்க வயலைக் கூட செழுமை யாக்கும் ஆறு! அள்ளிப் பருகத் திறந்து கிடக்கும் அமுத நீரைப் பாரு வெள்ளிச் சதங்கை ஓசை யெழுப்பி செல்லும் அழகைப் பாரு! வளையும் நாணல் க
வீறு மிக்க வீரன் போல
போகும் நதியைப் பாரு
சேறு மிக்க வயலைக் கூட
Advertisement
செழுமை யாக்கும் ஆறு!
அள்ளிப் பருகத் திறந்து கிடக்கும்
அமுத நீரைப் பாரு
வெள்ளிச் சதங்கை ஓசை யெழுப்பி
செல்லும் அழகைப் பாரு!
வளையும் நாணல் கரையின் ஓரம்
வணங்கு வதைப் பாரு
நெளியும் மீன்கள் பளிங்கு நீரில்
நீந்தும் அழகைப் பாரு!
களங்க மற்ற குழந்தை போல
கலகலப்பாய்ச் சிரித்து
குளங்கள் ஏரி நிரம்ப வைத்து
கொஞ்சும் அழகைப் பாரு!
மருந்து போன்ற மூலி கையின்
மணம் சுமக்கும் அருவி
தரையில் இறங்கி ஊர்கள் தோறும்
தவழும் அழகைப் பாரு!
பவளம், முத்து, விளைச்சலாகும்
பரந்த கடலை நோக்கி
கவனத் தோடு தேடி ஓடும்
கடமை உணர்வைப் பாரு!
கழனி செழிக்கப் பாயும் நதியில்
கழிவைக் கலக்க வேண்டாம்
உழவு மூலம் விளைச்ச லாகும்
உணவும் நஞ்சாய் மாறும்!
கட்டுப் பட்டு நடக்கும் நதியில்
குப்பை கொட்ட வேண்டாம்
கட்டும் அணையில் சேமிப் பதால்
காலத் துக்கு உதவும்!
அக் கரைக்குத் தோணி ஒன்று
அழைத்துச் சென்ற துண்டு
இக் கரைக்கும் அக் கரைக்கும்
இன்று பாலம் உண்டு!