திருக்குறள்
திருக்குறள்' நீதி நூலாகும் - அது தெய்வத்தின் குரலைப் போலாகும்!
திருக்குறள்' நீதி நூலாகும் - அது
தெய்வத்தின் குரலைப் போலாகும்!
அறம், பொருள், இன்பம் பகுப்பாகும் - இந்த
மானுட வாழ்க்கையின் தொகுப்பாகும்!
பதின்மர் அதற்கு உரைகண்டார் - அதைப்
படித்தோர் கருத்தின் கரைகண்டார்!
நாடு, மொழி, இனம் இதற்கில்லை - நல்ல
அன்பும் ஒழுக்கமும் அதற்கெல்லை!
எத்தனை மொழியில் மொழிபெயர்ப்பு - அவை
அத்தனையும் தமிழின் பெருஞ்சிறப்பு!
கற்று நடப்பவர் சிறந்தோராம் - பாரில்
கல்லார் தம்மை மறந்தோராம்!
"உலகப் பொதுமறை' அதன்பேராம் - புவி
உவந்து அளித்த நற்சீராம்!
தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்
பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!