முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: நரியும் கொக்கும்!

தந்திரம் மிக்க நரியொன்றுதனியே அமர்ந்து நெடுநேரம்எந்த விதத்தில் நண்பனையேஏமாற்றிடலா மென எண்ணியது!

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:28 AM
பகிர்:

தந்திரம் மிக்க நரியொன்று

தனியே அமர்ந்து நெடுநேரம்

எந்த விதத்தில் நண்பனையே

ஏமாற்றிடலா மென எண்ணியது!

உனக்கும் விருந்து தருகின்றேன்

உண்டு மகிழ்ந்து சென்றடலாம்

எனக்கும் இன்பம் ஏற்படுமாம்

என்றே கொக்கை அழைத்ததுவாம்!

திரவ உணவைச் சிறிதளவு

திறந்த அகன்ற தட்டினிலே

பருகச் சொல்லி ஊற்றிவிட்டு

பாங்காய்த் தானும் குடித்ததுவாம்!

கொக்கின் மூக்கு நீண்டதனால்

குனிந்து உண்ண இயலாமல்

மிக்க வருத்தம் அடைந்ததுவாம்

மிகவும் நரிதான் மகிழ்ந்ததுவாம்!

சிலநாள் சென்றன...கொக்காரும்

சிறிதும் இதனை மறவாமல்

நலமா என்றே விசாரித்து

நரிக்கு விருந்து படைத்ததுவாம்!

கூம்பு வடிவ பாத்திரத்தில்

கொஞ்சம் அடியில் உணவுவைத்து

"சோம்பல் இன்றிச் சுறுசுறுப்பாய்

சுகமாய் உண்பாய்' எனக் கூறி,

எளிதாய்க் கொக்கும் உணவருந்த

எட்டிப் பார்த்தும் முடியாமல்

வெளியில் சொல்ல வெட்கப்பட்டு

விரைந்து நரியும் திரும்பியதாம்!

முற்பகல் நாமும் ஒருவர்க்கு

முட்டாள்தனமாய்த் தீங்கிழைத்தால்

பிற்பகல் தமக்கே வருமென்று

பின்னர் நரிக்குப் புரிந்ததுவாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.