முகப்பு
சிறுவர்மணி

பஞ்சு தந்த பாடம்!

ஓர் இளைஞன் ஒரு நல்ல மனிதனைப் பற்றிப் பல அவதூறுகளைப் பரப்பினான். அதனால் அந்த நல்ல மனிதனுக்கும், அவரது குடும்பத்திற்கும் பெருத்த அவமானமாகப் போய்விட்டது. அந்த மிக நல்ல மனிதனும் அவரது குடும்பத்தினரும் நிம்மதி இழந்தனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

ஓர் இளைஞன் ஒரு நல்ல மனிதனைப் பற்றிப் பல அவதூறுகளைப் பரப்பினான். அதனால் அந்த நல்ல மனிதனுக்கும், அவரது குடும்பத்திற்கும் பெருத்த அவமானமாகப் போய்விட்டது. அந்த மிக நல்ல மனிதனும் அவரது குடும்பத்தினரும் நிம்மதி இழந்தனர்.

ஒரு சில நாட்களில் இளைஞன் தன் தவற்றை உணர்ந்தான்! தன் தவற்றுக்கு பிராயச்சித்தம் தேடினான்.

அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். கிராமத்தினரும் அவரை வரவேற்று உபசரித்தனர்.

துறவியும் அவ்வப்போது அனைவருக்கும் நல்லுரை வழங்கிக் கொண்டிருந்தார். தவற்றை உணர்ந்த இளைஞன் அவரைச் சந்தித்தான். தான் பரப்பிய அவதூறைப் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறி துறவியிடம் அழுதான்!

அவனைக் கடுமையாகப் பார்த்த துறவி, ""அவன் செய்த குற்றத்திற்கு மாற்றாக இலவம் பஞ்சு அடைத்த ஒரு புதுத் தலையணையை கொண்டு வரவேண்டும் என்றும், ஊரின் பொதுத் திறந்த வெளியில் அந்தத் தலையணையைப் பிய்த்து அதில் உள்ள பஞ்சைப் பறக்க விட வேண்டும் என்றும், பிறகு

அந்தக் காலி தலையணை உறையைக் கொண்டு வா'' என்றும் கட்டளையிட்டார்.

இதென்ன புதிரான பிராயச்சித்தமாக இருக்கிறதே? என்று இளைஞன் நினைத்தாலும் துறவி சொன்னபடியே செய்தான்! தலையணையில் இருந்த பஞ்சு காற்றில் ஊரெல்லாம் பறந்தது!

பிறகு இளைஞன் வெறும் தலையணை உறையுடன் துறவியிடம் வந்து, ""தாங்கள் கூறியபடியே செய்துவிட்டேன்...,எனது தவறு மன்னிக்கப்படுமா?''

என்று கேட்டான்.

கூர்மையாக அவனைப் பார்த்த துறவி, ""இப்பொழுது மன்னிக்கப்படாது...! நீ மறுபடி இந்த உறையை எடுத்துக் கொண்டு தலையணையைப் பிய்த்துப் போட்ட இடத்துக்குப் போ! அங்கே சிதறியும், பறந்து கொண்டும் இருக்கும் பஞ்சுத் துகள்களை ஒன்று விடாமல் திரட்டு! பிறகு தலையணை உறைக்குள் முன்புபோல் அடைத்து விடு!'' என்றார்.

""மீண்டும் பஞ்சைத் தலையணைக்குள் அடைப்பதா?...., அது எப்படி முடியும்?''...இளைஞன் தன் தலையைப் பிய்த்துக் கொண்டான்.

""வதந்தி பரப்புவதும் அப்படித்தான்....! நீ பரப்பிய அவதூறுகளை உன்னால் திரும்பப் பெற முடியுமா? உன்னால் நிம்மதி இழந்த அந்தக் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேள்! அதுவரை உனக்கு நிம்மதி இருக்காது! அவர்கள் அளிக்கும் மன்னிப்புதான் நிஜமான பிராயச்சித்தம்!'' என்றார்.

இளைஞனும் துறவி கூறியபடி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டான். அதுவும் துறவியின் முன்னிலையிலேயே! அவர்களும் அவனை மன்னித்தனர்!

மற்றவர்களைப் பற்றிய நல்ல விஷயங்களை அவன் எப்போதும் பேசினான். அவனுக்கு நிறைய நண்பர்களும் கிடைத்தார்கள்!

முழு கட்டுரையைப் படிக்க →