முகப்பு
சிறுவர்மணி

மனக்கோயில்!

கந்தன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடர் ஒருவரிடம் போய்ப் பலன் கேட்கப் போனான். சோதிடரோ அவன் ஜாதகத்தைக் கண்டதும் நடுங்கிப் போனார். ஏனென்றால் அவனுக்கு ஜாதகத்தில் ஆயுள் பலமே இல்லை!

Updated On : 18 நவம்பர், 2017 at 2:22 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:39 PM

கந்தன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடர் ஒருவரிடம் போய்ப் பலன் கேட்கப் போனான். சோதிடரோ அவன் ஜாதகத்தைக் கண்டதும் நடுங்கிப் போனார். ஏனென்றால் அவனுக்கு ஜாதகத்தில் ஆயுள் பலமே இல்லை!

அவனிடம் சோதிடர், ""ஐயா, எனக்கு இப்பொழுது ஜாதகம் முழுவதையும் பார்க்க நேரமில்லை. போய்விட்டு ஒரு மாதம் கழித்து வாருங்கள்''  என்று அனுப்பி விட்டார். 

ஒரு மாதம் வரை அந்த ஜாதகன் இருக்கமாட்டான் என்று சோதிடம் கூறுவதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் சோதிடர். 

Advertisement

இதெயெல்லாம் அறியாத கந்தன், சோதிடர் சொன்னபடி ஒரு மாதம் கழித்து வரலாம் என்று  ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.  வழியில் மழை கொட்ட ஆரம்பித்தது! ஒரு பாழைடைந்த கோயிலில்  ஒதுங்கி நின்றான். 

கோயிலைப்  பார்த்த கந்தன், "அழகான கோயில் !

இப்போது இப்படி பாழடைந்து கிடக்கிறது. என்னிடம் மட்டும் பணம் இருந்தால் இந்தக் கோயிலைப் புதிப்பித்து குடமுழுக்குச் செய்வேன்' என்று நினைத்துக் கொண்டான்.  கோயிலைப் புதுப்பித்தான். அவன் நின்ற இடம் முன் மண்டபம் எனவும் , கோயிலின் உட் பிரகாரம், வெளிப்பிரகாரம், கோபுரம் அனைத்தையும் தன் கண்களை மூடிக் கனவிலேயே கட்டி முடித்துக் குட முழுக்கும் செய்துவிட்டான். 

திடீரென்று விழித்துக் கொண்ட அவன் முன் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்துச் சீறிக் கொத்த வந்தது! கந்தன் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி மழைச் சகதியில் விழுந்தான்! உடனே மண்டபம் இடிந்து விழுந்தது!

இடிபாடுகளில் சிக்காமல் தப்பித்த கந்தன் வீடு வந்து சேர்ந்தான்.  ஒரு மாதம் ஓடிவிட்டது. கந்தன் தன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடரிடம் சென்றான். 

""நீர் எப்படி உயிரோடு இருக்கிறீர்?....உமக்கு ஆயுள் பலமே இல்லையே?...'' என்கிறார் சோதிடர். 
""உங்க முன்னாடி நான் உயிரோடுதானே நிற்கிறேன்?''
""நடுவில் ஏதோ நிகழ்ந்திருக்கிறது!...இங்கிருந்து போனதிலிருந்து என்ன நடந்தது என்பதைச் சொல்லும்'' என்றார் சோதிடர்.
கந்தன், தான் மழைக்காகக் கோயிலில் போய் ஒதுங்கியதையும், இடிந்த அந்தக் கோயிலைக் கட்ட ஆசைப்பட்டதையும் சொன்னான். 
""ஐயா, உமது ஜாதகப்படி உமக்கு ஆயுள் பலமே இல்லை. ஆனால் மனதிற்குள் கோயில் கட்டி குடமுழுக்கு செய்து விட்டீரே! அதனால்தான் உம்முடைய ஆயுள் அற்ப ஆயுளாகப் போகவில்லை!'' என்றார் சோதிடர். 
நீதி:  அறச்சிந்தனை ஆயுளைக் கூட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.