அனில் என்பது அந்த மாணவனின் பெயர். பள்ளிப் படிப்பை நல்ல மதிப்பெண்களுடன் முடித்தார் அனில்! தில்லி பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் "செயின்ட் ஸ்டீஃபன்' கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்தார். கல்லூரியில் அவருக்கு தகுதி அடிப்படையில் இடம் கிடைத்து விட்டது. கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் மாணவர்கள் நின்றனர். அனில் கடைசி நபராக வரிசையில் நின்றார்.
நல்ல கோடை வெயில்! வாட்டி வதைத்தது! அனிலால் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. நாக்கு வறண்டது. தண்ணீர் அருந்தப் போனால் இவ்வளவு நேரம் வரிசையில் நகர்ந்த இடம் பறிபோய்விடும். அதனால் தாகத்தை அடக்கிக் கொண்டார். வரிசையில் தொடர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில் அனில் மயங்கி விழுந்து விட்டார். கல்லூரி வளாகத்தில் இருக்கும் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று முகத்தில் நீர் தெளித்தனர். முதலுதவி செய்யப் பட்டது. அனிலுக்கு மயக்கம் தெளிந்தது. மருத்துவமனையில் அனிலின் வீட்டு விலாசம் கேட்டார்கள்.
அனில் தெரிவித்த விலாசம் என்ன தெரியுமா?
அனில்,
தகப்பனார் பெயர்: லால் பகதூர் சாஸ்திரி,
எண், 1. மோதிலால் நேரு மார்க்,
புதுதில்லி.
என்பதாகும்.
முகவரியைக் கேட்ட எல்லோரும் வாய் பிளந்தார்கள். ஆம்! அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் இளைய மகன்தான் "அனில்!'
பிரதமர் பதவியின் வாயிலாக தமது குடும்பத்தைச் சார்ந்தோர் சலுகைகள் பெறுவதை சாஸ்திரி விரும்பியதில்லை. தந்தையாரின் எண்ணங்களை அப்படியே ஏற்று நடந்தார் அனில்!
-செல்வகதிரவன்