புத்தகங்கள் படி!
பள்ளிக்கூடப் புத்தகங்கள் பரந்த அறிவை வளர்த்தாலும்
பள்ளிக்கூடப் புத்தகங்கள்
பரந்த அறிவை வளர்த்தாலும்
தெள்ளத் தெளிந்த அறிவுயரத்
தேடிக் கற்பாய் பலநூல்கள்!
அள்ள அள்ளக் குறையாத
ஆனந்தம் தான் இலக்கியங்கள்!
உள்ளம் தூய்மை அடைந்திடவே
உலகில் உண்டே அறநூல்கள்!
சிறிய குறளின் நூல்கற்றால்
சிறந்த மனிதன் ஆகிடலாம்!
நெறியாய் உலகில் வாழ்ந்திடவே
நீதி நூல்கள் கற்றறிவாய்!
அறிஞர் தம்மின் வரலாறு
அனைவருக்கும் வழிகாட்டும்!
பிறிது மொழியில் இருந்தாலும்
பெருமை உணர்ந்து படித்திடுவாய்!
புத்தகம்தான் உயிர் நண்பன்!
போற்றி உரைத்தார் பெரியோர்கள்!
புத்தகங்கள் திறந்திட்டால்
பூட்டப்படுமே சிறைச்சாலை!
புத்தகத்தை விரும்பாதோர்
புவியில் விலங்கைப் போலாவார்!
புத்தகங்கள் பலகோடி!
புரிந்து கற்றால் புகழ்கோடி!