சிறுவர்மணி

அன்பே தவம்!

DIN

தபோவனம் எனகிற காட்டில் பிரம்மதேவர் என்ற முனிவர் தியானம் செய்துகொண்டிருந்தார். அருகிலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் அவரை தரிசனம் செய்துவிட்டுச் செல்வர்.
 ஒருநாள்....
 அவருடைய ஆசிரமத்திற்கு சிலர் வந்திருந்தனர்.
 அவர் தியானத்தில் கண்கள் மூடியிருந்தார். அருகில் ஒரு பெரிய சிங்கம் அவர்முன் படுத்திருந்தது. பின் அவர் கண்விழித்தார். சிங்கத்திடம், "சற்று ஆசிரமத்தின் பக்கத்தில் சென்று அமர்!....'' எனக் கூறினார். சிங்கமும் அதன்படி கம்பீரமாக எழுந்தது. பின் ஒரு செல்லப் பிராணியைப்போல் அவரை விட்டு விலகி ஆசிரமத்தின் பக்கத்தில் சென்று அமர்ந்தது. பிரம்மதேவர் கிராமவாசிகளைத் தன் அருகில் அழைத்தார்.
 "அது ஒன்றும் செய்யாது!....வாருங்கள்''
 பயம் தெளிந்த மனிதர்கள் முனிவரின் அருகில் சென்றனர். எல்லோரும் அவர் முன் அமர்ந்தனர். முனிவர் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். பிறகு சிங்கத்தைத் தன் அருகில் அழைத்தார்.
 சிலருக்கு பயமாயிருந்தது.
 சிங்கம் அருகில் வந்தது. முனிவருக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தது. அதன் பிடரியை மெதுவாகத் தடவிக்கொடுத்தார் முனிவர். சிங்கத்திடம், "சரி,....இங்கே எல்லோரும் பயப்படுகின்றனர்.... நீ காட்டுக்குள் செல்வாய்!....'' என்றார்.
 சிங்கம் மெல்ல நடந்து காட்டுக்குள் சென்றது. இதைப் பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
 அவர்கள் பிரம்மதேவரை வணங்கி, "உங்கள் தவ வலிமையைக் கண்கூடாகக் கண்டோம்! உங்களது ஆற்றலை உணர்ந்தோம்!....எங்களுக்கு ஆசி கூறுங்கள்!....'' என்றனர்.
 பிரம்மதேவர் சிரித்துக்கொண்டே, "இந்தச் சிங்கம் வேடனின் அம்பு பாய்ந்ததால் இங்கு வேதனையோடு ஓடி வந்தது....என்னிடம் உதவி கேட்பதுபோல் பார்த்தது....அதை நான் புரிந்து கொண்டேன்....அதன் மீது பாய்ந்திருந்த அம்பைப் பிடுங்கி, காயத்திற்கு மருந்தும் போட்டேன்....அது குணமாகி விட்டது!....நான் அன்பு காட்டியதைப் போல் அதுவும் என்னிடம் அன்பு காட்டுகிறது...இதில் என் தவ வலிமை என்று ஒன்றும் இல்லை! அன்பே சிறந்த தவமாகும்!...'' என்றார்.
 அங்கு கூடியிருந்தோர் அன்பு தவழும் அவரது முகத்தைக் கண்டு நெகிழ்ந்தனர்.
 ஜோ.ஜெயக்குமார்,
 நாட்டரசன்கோட்டை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT