நிதானம்!
சாகேதர் என்னும் ரிஷி தற்காப்புக் கலை, யோகம், தியானம் முதலியவைகளில் வல்லவர்.
சாகேதர் என்னும் ரிஷி தற்காப்புக் கலை, யோகம், தியானம் முதலியவைகளில் வல்லவர். சிலருக்கு அவைகளில் பயிற்சியும் அளித்து வந்தார். சீடர்களுடன் அவர் ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்தார். அந்த ஆசிரமம் ஒரு நதியின் ஓரம் இருந்தது.
அமரேந்திரபுரத்திலிருந்த சித்தார்த்தனுக்கு தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள ஆவலாய் இருந்தது. ஆனால் சித்தார்த்துக்கு எதிலும் பதட்டம்....அவசரம் இருந்தது. சாகேதர் பற்றிக் கேள்வியுற்றான். தன் பெற்றோரிடம் விடை பெற்றுக் கொண்ட அவன் சாகேத ரிஷி இருக்கும் ஆசிரமத்திற்கு விரைந்தான். அவர் வசிக்கும் ஆசிரமத்தையும் அடைந்தான்.
சித்தார்த்தன் சாகேதரிடம், ""குருவே, எனக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள ஆவலாய் இருக்கிறது...நான் இப்போதே உங்களிடம் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.....எப்போது பாடத்தை ஆரம்பிக்கலாம்? ....எத்தனை வருடங்கள் ஆகும் அதைக் கற்றுக்கொள்ள?...'' என்று சரமாரியாகக் கேட்டான்.
சாகேதர் அவனிடம் சிரித்துக் கொண்டே, ""ம்......சரி,.....இப்போதே பாடத்தை ஆரம்பித்தால் சுமார் ஆறு வருடத்தில் கற்றுக் கொள்ளலாம்!'' என்றார்!
""ஐயய்யோ!.....அவ்வளவு வருடம் ஆகுமா?.... நான் விரைவாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்....தினமும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நான் பயிற்சி செய்கிறேன்.....ஐந்தாறு மடங்குகூட பயிற்சி செய்யத் தயார்!.....அப்படிச் செய்தால் நான் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் ஆகும்?'' என்றான் பதட்டத்துடன்!
குரு அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, ""பன்னிரண்டு வருடங்கள் ஆகும்!'' என்றார்!