கதைப் பாடல்!
"கருத்து மிக்க பழமொழிகள் கணக்கில்லாமல் உள்ளன! - அதை
உண்மை அறிக!
"கருத்து மிக்க பழமொழிகள்
கணக்கில்லாமல் உள்ளன! - அதை
அர்த்தம் மாற்றிக் கூறுவார்
அவற்றின் உண்மை அறிக நீ!''
என்று மாமா சொன்னதும்
ஆர்வத்தோடு அவர் பேச்சைக்
கேட்க அருகில் அமர்ந்திட்டோம்!
ஆவலோடு கவனித்தோம்!
"....."பந்தி யென்றால் முந்துக!...'
பழமொழியின் பொருளென்ன?
வந்தவர்கள் மகிழ்ந்திட
விருந்து படைக்க முந்து நீ...
..."கல்லைக் கண்டால் நாயில்லை...
நாயைக் கண்டால் கல்லில்லை...'
சொல்லு வார்கள் பழமொழி
உள்ள பொருளும் தெரியுமா?....
....நல்ல கலைஞன் சிலையிலே
நாயைக் கண்டால் கல் இல்லை!
கலை ரசனை இல்லையேல்
கல்லைக் கண்டால் நாயில்லை!....
...."ஆவதெல்லாம் பெண்களால்....
அழிவதெல்லாம் பெண்களால்!...'
யாவருமே கூறுவர்!....
அந்த மொழியின் பொருளென்ன?
...நன்மை ஆகும் பெண்களால்!...
தீமை அழியும் பெண்களால்!....
உண்மையான பொருள் இதை
உணர வேண்டும் தம்பி நீ!...''
பழமொழியின் அர்த்தங்கள்
அருமையாக சொல்லிட்டார்!
உண்மை அர்த்தம் புரியவைத்த
மாமாவுக்கு நன்றிகள்!
-சி.விநாயகமூர்த்தி