உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
பாராட்டுப் பாமாலை! 43
முன்னாள் சிறைவாசி வேதமணி
முறையாகத் தண்டனை ஏற்றே
தன்னாளில் ஆண்டுகள் பதினேழைத்
தவிப்பினில் கழித்தே வெளிவந்தார்!....
வயது அவர்க்கு ஐம்பத்தி ஏழு
வந்த பல நோயால் உடல் தளர்வு
தயவினைக் காட்ட யாரும் இல்லை
தாழிட்டுக் கிடந்தது அவர் தொழிலே!
விடுதலை பெற்ற வேதமணி விரைந்து தன்
வியாபாரத்தைத் தொடர எண்ணி
அளித்தார் ஒரு மனு ஆட்சியரிடமே
அலுவலகம் தில்லியைக் காட்டியதே!
"பின் புலம் நன்றாய் இல்லை!'' எனக்கூறி
பெருவங்கி எல்லாம் பணம் தர மறுத்தது!
தன் நிலை சொன்னார் வேதமணி
தூத்துக்குடியின் ஆட்சியர் பால்
ஆட்சியர் நந்தூரி மனித நேய
மாட்சியர் தன் விருப்ப நிதியில்
கேட்ட ஒரு லட் சத்தைக்
கேட்டபடி கொடுக்க ஆணையிட்டார்!
"மேல வெள்ளமடம்' எனும் ஊரில்
வேதமணி மின் பொருள் கடை திறந்தார்!
வேதனை நீக்கிய ஆட்சியரோ
அதனை அடிக்கடி பார்த்து வந்தார்!
பின்னர் ஊரக வளர்ச்சியினர்
பெருமனம் கொண்டே உதவி செய்ய
தன்காலில் நிற்கிறார் வேதமணி!
"சந்தீப் நந்தூரி' புகழ் பாடி!
தீர்ப்புகள் சொல்லலாம் பாவி என்று
திருந்தி விட்டால் அவர் தேவனன்றோ!
ஆர்பரிப் பின்றியே ஆதரித்த
ஆட்சியர் "நந்தூரி' வாழியவே!
செ.சத்தியசீலன்
இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...