பறவை காத்தான் சிபி மன்னன்
பாரதம் காத்தான் அபிநந்தன்!
உறவை உயிரை மறந்தான்
உயரே தனியே பறந்தான்!
பயங்கர வாதப் பூமியில்
தயங்கி வீழ்ந்த மகனைப்
பாய்ந்து பிடித்துக் கொண்டார்
பயமற அபிநந்தன் நின்றான்!
அடிமேல் அடியும் விழுந்தது
தடியால் தாக்கவும் செய்தனர்!
கொடியைக் காத்த குமரன்போல்
அடிகளை ஏற்றான் அபிநந்தன்!
அரசின் கவனம் அவன்மீது
அனைத்து நாடுகளின் நல்லெண்ணம்
விரைந்து செயல்பட வெற்றியுடன்
வீரன் வந்தான் டில்லி நகர்!
வான்படை தன்னில் பணிபுரியும்
மூன்றாம் தலைமுறை அபிநந்தன்
செந்தமிழ் மண்ணின் தவப்புதல்வன்!
சென்றான்! வென்றான்! வந்தானே!
வர்த்தமான் நந்தனின் தந்தை
அர்த்தம் உள்ள வார்த்தை சொன்னார்!
வீரமகனைப் பெற்றேன் பெருமிதம்
விளங்கிட வாழ்கிறேன் என்றார்!
இந்தியர் யாவரும் பெருமிதம் எய்திடப்
போற்றுவோம் அபி நந்தனின் வீரம்!
நந்தனைப் பெற்ற தந்தை, தாயினைப்
போற்றுவோம்!...போற்றுவோம்!... போற்றுவோமே!