மலையும் அதனைச் சார்ந்த இடமும்
மனமகிழ் குறிஞ்சி நிலமாகும்!
தலைபடும் அருவி, குகையும் புதரும்
தன்னிலை கொண்ட களமாகும்!
காடும் அதனைச் சார்ந்த இடமும்
கார்தரும் முல்லை நிலமாகும்!
நீடு மரங்கள் விலங்கினம் பறவைகள்
நிரம்பிய அடர்ந்த தளமாகும்!
முல்லை, குறிஞ்சி கோடை பற்றிட
மூண்டது பாலை நிலமாகும்!
கல்லும் மணலும் வறட்சியும் சூழ்ந்த
கானல் பெருகும் களமாகும்!
வயலும் அதனைச் சார்ந்த இடமும்
வளமிக மருதம் நிலமாகும்!
பயனுறு வேளாண்தொழிலை ஏந்தும்
பசுமை சூழ்ந்த தளமாகும்!
கடலும் அதனைச் சார்ந்த இடமும்
கண்கவர் நெய்தல் நிலமாகும்!
கடல்சார் வணிகம் மீன்பிடி தொழிலும்
கருத்தே நிகழும் களமாகும்!
கடம்பை அறிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.