குயில், மரத்தில் இருந்தபடி
பாட்டுப் பாடுது; சின்னக்
குருவிகளும் கிளையில் இருந்து
பாட்டுக் கேட்குது;
மயில், தனது தோகை விரித்(து)
ஆடிக் காட்டுது; வேப்ப
மரம், தனது கிளைகள் ஆட்டிப்
பூக்கள் தூவுது;
பயில்வதற்குப் பள்ளிசெல்லும்
பிள்ளைகள் போலே வெகு
பரபரப்பாய் எறும்புக் கூட்டம்
விரைந்து போகுது!
வெயில், மிகுந்து தரையைச் சூடு
ஆக்கிவிட்டது ; நிழல்
விரித்த மரக் கூட்டத் தாலே
காற்றும் வந்தது!
காற்று வந்து சொன்ன சேதி
கேட்டுக் கொண்டுதான் அந்தக்
காக்கை கூட்டம் ஊர் முழுக்கக்
கத்திச் சொல்லுதே!
"நேற்றுப் போல, இன்றும் வீட்டில்
இருக்க வேண்டுமாம் தொற்று
நோய்ப டர்ந்து பரவி டாமல்
காக்க வேண்டுமாம்!
"காகா" "காகா" என்று காக்கை
கத்தும் ஓசைதான் நம்மைக்
காக்கும் நல்ல மந்திரமாம்"
கிளியும் சொல்லுது!
ஆகா, இந்தக் காக்கை சொன்ன
படி எல்லாரும் நாம்
அவரவரின் வீட்டுக்குள்ளே
அடங்கி வாழ்வோமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.