தகுதி!
சீடன் ஒருவன் குருவின் உள்ளம் கோணாமல் நடந்து கொண்டான். மகிழ்ந்த அவர், ""உனக்கு என்ன வேண்டும்?.... ' என்று கேட்டார்.
சீடன் ஒருவன் குருவின் உள்ளம் கோணாமல் நடந்து கொண்டான். மகிழ்ந்த அவர், ""உனக்கு என்ன வேண்டும்?.... ' என்று கேட்டார்.
""இறந்தவரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை எனக்குச் சொல்லித் தாருங்கள்'' என்றான் அவன்.
""சீடனே,.... அந்த மந்திரம் உனக்கு வேண்டாம்.... அந்த மந்திரத்தைப் பயன் படுத்த ஒரு தகுதி வேண்டும்!.... அது இப்போது உனக்கு இல்லை..... அந்த பக்குவம் உனக்கு ஏற்படும்போது அதை உனக்கு சொல்லித் தருகிறேன்!.... இப்போது வேறு ஏதாவது வேண்டுமானால் கேள்!....'' என்றார் குரு.
""நீங்கள்தான் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டீர்கள்!.... இப்பொழுது கொடுக்கத் தயங்குகிறீர்கள்!.... மந்திரத்தைப் பயன் படுத்தும் தகுதி எனக்கு இருப்பதாகவே நான் கருதுகிறேன்!..... என் மீது ஐயப்படவேண்டாம்!....' என்றான் சீடன்.
வாக்குத் தந்து விட்டோம்!... இனி அதை மீறக்கூடாது.... என நினைத்தார் அவர்.
சஞ்சீவினி மந்திரத்தை அவனுக்கு சொல்லித் தந்தார் குரு. பிறகு, ""இந்த மந்திரத்தைச் சொன்னால் இறந்தவர் யாராக இருந்தாலும் பிழைத்துக் கொள்வார்.... இதை கவனமாகப் பயன்படுத்து!''
ஆசிரமத்திற்கு அருகே ஒரிடத்தில் நிறைய எலும்புகள் இருந்தன.
சீடன் சஞ்சீவினி மந்திரத்தைச் சோதித்துப் பார்க்க நினைத்தான். அந்த எலும்புகளைப் பார்த்து மந்திரத்தைச் சொன்னான்.
எல்லா எலும்புகளும் சேர்ந்து ஒரு ஒநாயாக உயிருடன் உருவெடுத்தது! உயிர் வந்தவுடன் அதற்குப் பசித்தது!.... சீடனைத் துரத்த ஆரம்பித்தது. சடாரென்று சீடன் குருவின் குடிசைக்குள் சென்றான்.
நடந்தது என்ன என்பதை ஊகித்து அறிந்துகொண்டார் குரு. பாய்ந்து வரும் ஒநாயைப் பார்த்து குரு ஏதோ சொல்ல அது மீண்டும் எலும்புத் துண்டுகளாக ஆகிவிட்டது!
""உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபயோகிக்கும் பக்குவம் வரவில்லை என்பதை இப்போது தெரிந்துகொண்டாயா?'' என்று கேட்டார் குரு.
சீடன் தலைகுனிந்தபடி நின்றான்.