அங்கிள் ஆன்டனா
நமக்கு துக்கம் வந்தால் ஏன் கண்ணீர் வருகிறது?
நமக்கு துக்கம் வந்தால் ஏன் கண்ணீர் வருகிறது?
பதில்: துக்கம் வந்தால் மட்டுமல்ல வெங்காயம் வெட்டினால்கூட கண்ணீர் வரும். அடக்க முடியாமல் சிரித்தாலும் கண்ணீர் வரும்.. பெரிய சாதனைகளைப் பார்த்து வியக்கும்போதும் கண்ணீர் வரும்...
மனிதன் அளவுக்கு அதிகமாக உணர்சி வசப்படும்போது, உள்ளே இருக்கும் குழாய்கள் திறந்து கொள்கின்றன. மளமளவென்று நீரை வெளியேற்றுகின்றன. இந்த நீர்தான் கண்ணீராக வெளிவருகிறது. உள்ளே ஒரு குழாய் ரிப்பேர்காரர் இருக்கிறார் போலும்.
இந்தக் குழாய் ரிப்பேர்காரர் நமது கண்களுக்கு மிக அருகாமையில் அமர்ந்து இருக்கிறார். அதாவது கண் இமைக்கும் கண் பாப்பாவுக்கும் இடையில் இருக்கிறார். இவர்தான் கண்ணீர் சப்ளை செய்பவர். கண்ணிரைத் தயாரிக்கவும் செய்வார், வெளியேற்றவும் செய்வார்.
இவர் ஒருவிதமான "கிளாண்ட்'. லாக்ரிமால் கிளாண்ட் என்று இவருக்குப் பெயர். உங்களுக்கு உணர்வு மேலிடும்போது நமது கண் இமை துடித்து இவர் மீது படுகிறது. இவரும் ரொம்ப உணர்ச்சிவசப்படக்கூடியவர். ஆகவே, உடனே நீரை உண்டாக்குவார். கண் இமைகள் மீண்டும் மீண்டும் படபடக்க மளமளவென்று நீர் உருவாகி, கண்ணீராக வெளியேற்றப்படுகிறது.
இந்தக் கண்ணீர் வெளிவருவது நல்லது என்றுதான் எல்லா ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள். துக்கத்தை அடக்கி அடக்கி மனதைப் புண்ணாக்கிக் கொள்வதற்குப் பதிலாகக் கண்ணீராக வெளியேற்றி விடுவதுதான் நல்லது. ஆகவே தைரியமாகக் கண்ணீர் விடுங்கள், ஆனால் முதலைக் கண்ணீர் மட்டும் விடாதீர்கள்.