முத்துக் கதை!: பிறந்த நாள்!
அன்று அன்பரசனுக்கு ஒன்பதாவது பிறந்தநாள். அவனுடைய அம்மா, ""அன்பு, இந்தா,..... ஐம்பது ரூபாய். உன் பிறந்த நாளுக்காக உன் வகுப்பில் அனைவருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடு. பணம் பத்திரம்....'' என்றபடி ஐம்பது ரூபாயைக்
அன்று அன்பரசனுக்கு ஒன்பதாவது பிறந்தநாள். அவனுடைய அம்மா, ""அன்பு, இந்தா,..... ஐம்பது ரூபாய். உன் பிறந்த நாளுக்காக உன் வகுப்பில் அனைவருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடு. பணம் பத்திரம்....'' என்றபடி ஐம்பது ரூபாயைக் கொடுத்தாள். அவன் பள்ளிக்குச் சென்றவுடன் அம்மா, அன்பின் வகுப்பாசிரியையை அலைபேசியில் அழைத்து விவரத்தையும் தெரிவித்தாள்.
அன்பரசன் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு மரத்தடியில் மூன்று குழந்தைகள் தங்களது பெற்றோரிடம், ""பசிக்குதும்மா!.... ஏதாவது கொடும்மா.... '' என்று அழுதுகொண்டிருப்பதையும், அந்த ஏழைப் பெற்றோர்களி என்ன செய்வதென அறியாமல் வருந்தியபடி இருப்பதையும் பார்த்தான். அன்பு என்னும் பேருக்குத் தகுந்தாற்போல் அவன் மனம் அந்தக் காட்சியைக் கண்டதும் உருகிவிட்டது!
உடனே அன்பு அங்கிருந்த சிறிய மெஸ்ஸினுள்ளே சென்று, ஐம்பது ரூபாய்க்குப் பத்து இட்டிலிகளை வாங்கினான். அதை அப்படியே அவர்களிடம் கொடுத்தான். அந்த ஏழைப் பெற்றோர்கள், ""நல்லா இரு தம்பி!'' என்று வாழ்த்திக் கொண்டே அதை வாங்கிக் கொண்டனர். அந்தக் குழந்தைகளும் அவனை நன்றியுடன் பார்த்துச் சிரித்தன. அன்பரசனுக்கு மனது நிறைந்தது போல் இருந்தது.
வகுப்புக்குள் சென்றதும், வகுப்பாசிரியை அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். பிறகு அன்பரசனிடம், சாக்லேட்டை எல்லோருக்கும் கொடுக்கும்படி கூறினார். அன்பரசன் வழியில் நடந்ததைத் தயக்கத்துடன் கூறினான். வகுப்பாசிரியைக்கு வியப்பும், நெகிழ்ச்சியும் ஏற்பட்டது. அன்பரசனைத் தன்னருகில் அழைத்தாள். மற்ற மாணவர்களைப் பார்த்து, ""அன்பரசன் செய்த இந்தச் செயல் மிகவும் உயர்ந்தது..... பிறந்த நாளன்று ஏழைகளின் பசியை நீக்கியிருக்கிறான்! நண்பர்களுக்கு சாக்லேட் கொடுப்பதை விட அவன் செய்தது மிகவும் உயர்ந்த செயல்! இது போலவே நீங்கள் அனைவரும் உங்களது பிறந்தநாளன்று ஏழைகளின் பசியைத் தீர்த்தால் உங்களை அந்த ஏழைகள் வாழ்த்துவார்கள். இப்படித்தான் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்! அந்த ஏழைகள் அன்பரசனை வாழ்த்திய வாழ்த்துகள்தான் இறைவனின் ஆசிகள்! எல்லோரும் அன்பரசனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளை ஒன்றாக உரத்துக் கூறுங்கள்!'' என்றார்.
உடன் அனைத்து மாணவர்களும், ""ஹாப்பி பர்த் டே அன்பு!'' என்று பாடி வாழ்த்தினார்கள்.
வகுப்பாசிரியை, அன்பரசனின் அம்மாவிடம் அலைபேசியில் விவரத்தைக் கூறினார். மாலையில் அன்பரசன் வீட்டுக்குப் போனதும், அம்மா அவனைப் பெருமையுடன் கட்டியணைத்தாள்.