முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: பாலைவன ரோஜா - ஆர்கானியா மரம்

நான்தான் ஆர்கானியா மரம்  பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஆர்கானியா ஸ்பினோசா   என்பதாகும். நான் சப்போட்டேசியே   குடும்பத்தைச் சேர்ந்தவன்.

Updated On : 3 ஏப்ரல், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

குழந்தைகளே நலமா?

நான்தான் ஆர்கானியா மரம்  பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஆர்கானியா ஸ்பினோசா   என்பதாகும். நான் சப்போட்டேசியே   குடும்பத்தைச் சேர்ந்தவன்.  எனது தாயகம் வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரோக்கோ ஆகும். நான் ஒரு பாலைவன மரமாவேன்.  இஸ்ரேல் நாட்டிலுள்ள நெகேவ் பாலைவனத்திலும், இந்தியாவின் மேற்குப் பகுதியில், பெரிய இந்திய பாலைவனம் என்று அழைக்கப்படும், அதாவது இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் எல்லையாகவுள்ள தார் பாலைவனத்திலும் நானிருக்கேன். எனவே, வறட்சிப் பகுதிகளில் நான் நன்கு வளர்ந்து உங்களுக்கு பலன்கள் பல கொடுப்பேன்.  

வறட்சியை மேலும் உண்டாக்காமல் தடுக்கும் சக்தி என்னிடமிருக்கு. என் வேர்கள் தண்ணீரைத் தேடி பூமியில் ஆழமாகச் செல்லும்.  அதனால், நான் மண் அரிப்பைத் தடுத்து, நிலத்தடி நீரைக் காப்பேன்.  என் உயரம் இருபது அல்லது இருபத்தைந்து அடிதான் இருக்கும். ஆனால், என் கிளைகள் 23 அடிக்கும் பரவியிருக்கும். 

Advertisement

குழந்தைகளே, எனக்குப் பெருமையை அள்ளித் தருவது எது தெரியுமா? என் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்தான். இதைத் திரவத் தங்கமுன்னும் சொல்லலாம். அந்த எண்ணெய்க்கு அவ்வளவு மதிப்பு இருக்கு.

என் விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மிகவும் பிரபலம்.  இதில் வைட்டமின் "எ' மற்றும் "இ' அதிகமாயிருக்கு.  மேலும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமோ-6. கொழுப்பு அமிலங்கள், லினோலிக் அமிலம் நிறைஞ்சிருக்கு. இது இதய பலத்திற்கு நல்லது. என் எண்ணெய்யை உங்கள் உடம்பில் தொடர்ந்து தடவி வந்தால் சருமம் என்றும் சுருங்காது, அதனால் வயது மூப்படையாது.  தலைமுடியில் தடவினால் முடி உதிராது.  ஏன்னா, இந்த எண்ணெயிலிருக்கும் வைட்டமின் "இ' டோகோபெரோ, தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செல் உற்பத்தியை அதிகரிக்க உதவுது. 

வளரிளம் பருவத்தினர் முகத்தில் என் எண்ணெய்யைத் தடவினால் முகப்பரு அண்டவே அண்டாது.  அது மட்டுமில்லை குழந்தைகளே, நீங்கள் நீராடும் போது ஆர்கன் எண்ணெய் தேய்த்து குளித்தால்  சோரியாசிஸ், எக்சிமா போன்ற தோல் நோய்கள் எட்டிக் கூட பார்க்காது.  கால்களில் ஆணி, வெட்டுக்காயம் போன்றவற்றிருக்கும் இந்த எண்ணெய் சிறந்த நிவாரணியாகும். 

மேலும், அழகுசாதனப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் தயாரிக்கவும் இந்த எண்ணெய் உதவுது. ஆர்கானிய எண்ணெய் உற்பத்தியில் மொரோக்கோ முன்னணியிலிருக்கு. அதனால்,  இங்கு பெண்கள் கூட்டுறவு அமைப்பை நிறுவி ஆர்கானிய எண்ணெய் உற்பத்தியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள். நிறைய லாபமும் கிடைக்கிறதுன்னு சொல்றாங்க.  அதனால், நான் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரமா இருக்கேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன். பாலைவனப் பகுதியின் உயிர்ச்சூழலை மேம்படுத்த நான் இன்றும் துணையிருப்பதால், 1998-ஆம் ஆண்டில் யுனேஸ்கோ என் மரத்தை உயிர்க்கோள இருப்பு என வேல்ட் ஹெரிட்டேஜ் பட்டியலில் சேர்த்து என்னை உலக அளவில் பெருமைப்படுத்தியிருக்கு..

என் கிளைகள் தரையில் தாழப் பரவி வளரும்.  என் இலைகளை ஆடுகள் விரும்பு உண்ணும்.  அதனால், எனக்கு ஆட்டுத்தழை மரம் என்ற பெயருமுண்டு.  ஒரே மரத்தில் பத்து, இருபது ஆடுகள் கூட என் மீது ஏறி கிளைகளில் நின்று விரும்பி இலைகளை சாப்பிட்டு விட்டு செல்வார்கள். "ஈதல் இசைபட வாழ்தல்' என்றும் புகழைத் தரும் இல்லையா குழந்தைகளே.  குழந்தைகளே, கல்லுக்குள்ளும், ஈரமிருக்கு என்று உங்களுக்குத் தெரியும். அதே போன்று பாலைவனத்திலும் ஈரமுண்டு என்பதற்கு நானே சான்று. 200 ஆண்டுகள் வரை கூட நான்  உயிர் வாழ்வேன்.

நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.