மரங்களின் வரங்கள்!: பாலைவனத்து ரோஜா - உகாய் மரம்
நான் தான் உகாய் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் சால்வடாரா பெர்சிக்கா என்பதாகும். நான் சல்வடராசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குறுமரமாவேன்.
குழந்தைகளே நலமா,
நான் தான் உகாய் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் சால்வடாரா பெர்சிக்கா என்பதாகும். நான் சல்வடராசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குறுமரமாவேன். பாலை நிலத்து மரங்களில் நான் முக்கியமானவன். என்னை ஆங்கிலத்தில் மிஸ்வாக் என்று சொல்வாங்க. அராக் என்பது எனது அராபிய பெயர். என் தாயகம் பாரசீகம். என் அடி மிகவும் மெல்லியதாக சொரசொரப்பாக இருக்கும். நான் கடும் வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி வளருவேன். என் தண்டினை புறாவின் முதுகுக்கு உவமையா சொல்வாங்க. என் பூக்கள் சிறியதாக பசுமையுடன் மஞ்சள் நிறத்திலிருக்கும். கடலோர சமவெளி பகுதிகளிலும், உவர் நிலங்களிலும் நான் வளருவேன். கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்படும் 99 மலர்களில் பாங்கர் மலரும் ஒன்று. இது என் மரத்தின் மலர் தான். என் இலைகள், பட்டைகள், வேர்கள், கட்டைகள், பூக்கள், காய்கள், பழங்கள், விதைகள் அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை.
என் இலைகள் முட்டை வடிவிலும் இருக்கும். என் மரத்தின் இலைகளும், பழங்களும் சிறுநீரக கல் நீக்கத்திற்கும், வீக்கத்திற்கும் அருமருந்து. ஆப்பிரிக்க மக்கள் என் இலைகளை உணவாக உட்கொள்றாங்க. கால்நடைகளுக்கும் என் இலைகளை உணவாகக் கொடுக்கலாம். என் இலைகளை நெருப்பில் வாட்டி இளஞ்சூட்டுடன், மூட்டு விக்கம் உள்ள பகுதிகளின் மேல் வைத்து கட்டினால் மூட்டு வலி சட்டுன்னு போய்டும்.
Advertisement
அதுமட்டுமில்லை குழந்தைகளே, என் மரத்தின் இலைகள், வேர் பட்டைகளை மைய அரைத்து கூழக்கி பாம்பு கடித்த இடத்தில் வைத்து கட்டினால், அவ்விஷம் இறங்கி விடுவதோடு, வலியும் மறைந்து போகும். என் இலைகளை வெந்நீரில் ஊற வைத்து கஷாயமாக்கி குடித்தால் ஜலதோஷம், இருமல், காய்ச்சல் வரவே வராது. மூலநோய் உள்ளவர்கள் என் இலைகளை மைய அரைத்து கூழக்கி ஆசனப் பகுதியில் தடவினால் அந்த நோய் இருந்த இடம் தெரியாது.
என் பழங்கள் நெல்மணிகளைப் போல மிகச் சிறியதாக இருக்கும். நீங்க இவற்றை பச்சையாகவும், உலர வைத்தும் சாப்பிடலாம், இனிப்பா இருக்கும். என் பழங்கள் மலச்சிக்கலைப் போக்கும் திறன் கொண்டவை. என் விதையை பொடி செய்து மூக்குப் பொடி போல் நாசியில் உறிஞ்சினால் ரினைடீஸ், சைனுசைட்டிஸ் குணமாகும்.
உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, பற்பசை தயாரிக்கும் வணிகப் நிறுவனங்கள் என் வேரிலிருந்தும், பட்டைகளிலிருந்தும்தான் பற்பசைகளைத் தயாரிக்கிறாங்க. என் வேரிலிருந்து எடுக்கப்படும் குச்சிகளை பல் துலக்க பயன்படுத்தலாம். சொன்னா ஆச்சரிப்படுவீங்க, என் வேர்களை உலக சுகாதார நிறுவனம் வாய்ச் சுத்தத்திற்கான சிறந்த பொருளா பரிந்துரைத்துள்ளதாம். ஏன்னா, இதில் பல் சுத்தத்தைக் காக்கவும், பல் சம்மந்தமான நோய்கள் உள்ளிட்ட வேறு பல நோய்களையும் சீராக்கும் குணமிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
என் காய்கள் சிவப்பு நிறத்தில் உருண்டையாயிருக்கும். என் காயிலிருந்து வெடித்து உதிரும் விதை மிளகைப் போய் காரமாயிருக்கும். பறவைகள் என் விதைகளை விரும்பி உண்பாங்க. சில சோப்பு தாயாரிக்கும் நிறுவனங்கள் என் விதைகளிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய்யை டிடெர்ஜெண்ட்டாக பயன்படுத்தறாங்க.
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகில் மேலப்புதுக்குடியிலும், இராமநாதபுரம் அருள்மிகு சந்தவளியான் திருக்கோவில் வளாகத்திலும், தாதனேந்தல் அருள்மிகு நொண்டிக் கருப்பன் திருக்கோவிலிலும், கடுகு சந்தை சத்திரம் அருள்மிகு சோணைக் கருப்பசாமி திருக்கோவிலிலும் என்னை நீங்கள் காணலாம். இவை சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரங்கள்னு சொல்றாங்க. நான் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவாமூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவிலில் தலவிருட்சமா இருக்கேன்.
குழந்தைகளே, இம்மரம் 1400 ஆண்டுகள் பழமையானது. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் நாயன்மார் இங்குதான் பிறந்தார். இங்கு என் மர இலைகள் 6 சுவைகளை உடையது. தீராத வயிற்று நோய் உடையவர்களுக்கு என் இலை பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)