முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: மணங்களின் அரசன்- இலவங்க மரம்

நான் தான் இலவங்க மரம் பேசுகிறேன்.   எனது தாவரவியல் பெயர் சின்னமாமம் வேரம் அல்லது சி சேலானிக்கம் என்பதாகும்.

Updated On : 20 மார்ச், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:17 AM


குழந்தைகளே நலமா?

நான் தான் இலவங்க மரம் பேசுகிறேன்.   எனது தாவரவியல் பெயர் சின்னமாமம் வேரம் அல்லது சி சேலானிக்கம் என்பதாகும்.  நான் லாரசீயே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  எனது தாயகம் இலங்கை.  நான் ஒரு வெப்ப மண்டல பசுமை மாறா மரமாவேன். எனக்கு தாளிசபத்திரி என்ற பெயருமுண்டு.   நான் மிதமான வெப்பம், ஈரப்பதமான சீதோஷ்ணநிலையில் வளருவேன்.  நான் 10, 15 மீட்டர் உயரம் வரை வளருவேன்.  குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமா,  உலகம் முழுவதும் 250 வகை இலவங்க மரங்கள் உள்ளன என்று.  கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் குமுளி, தேக்கடிப் பகுதிகளில் என்னை நீங்கள் அதிகமாகக் காணலாம்.

என் கிளைகள் பார்ப்பதற்கு கொய்யா மரக் கொம்பு போன்று இருக்கும். கிளைகள் தாழவே தொங்கும். இலைகள் எதிரெதிராக இருக்கும்.  என் மலர்களும் பச்சையாகவே இருக்கும். ஆனால், மணம், ஆஹா அற்புதம்.  என் பழம் கருப்பாக 1-2 செ.மீ. நீளத்தில், நீள்வட்டமாக இருக்கும். 

Advertisement

குழந்தைகளே, மணமணக்கும்  இலவங்கப் பட்டைகள் எப்படி செய்கிறார்கள் என்று தானே கேட்கிறீர்கள். என் கிளைகளை வெட்டி, ஊற வைத்து, கணுக்களை நீக்கி, மேல் தோலை சுரண்டி, பின் கூரிய கத்தியால் தோலை உரித்து எடுப்பது மேல் அடுக்கை உரித்து எடுக்கிறார்கள்.  அதைச் சுருளாகச் சுற்றி ஒரே நாள் நிழலில் காய வைத்தால் மணக்கும் இலவங்கப் பட்டைகள் உங்களுக்குத் தயார்.  என் பட்டையைத் தான் மசாலாவின் நாயகன் என்று சொல்றாங்க. என் பட்டைக்கு உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் குணமிருக்கு.  உணவின் மீது பாக்டீரியா வளர்ந்து அப்பொருள் கெட்டுப் போகாமல் இருக்க என் பட்டையிலுள்ள பினால் எனும் வேதிப் பொருள் உதவுது.  
அது மட்டுமல்ல குழந்தைகளே, உங்கள் நல்ல உடல் நலத்திற்குத் தேவையான மாவுப் பொருள், புரதம், கொழுப்பு, நார் சத்து,  போலேட் வைட்டமின், நியாசின், பான்டோதனிக் அமிலம், பைரிடாக்சின், கால்சியம், இரும்பு, தாமிரம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் முதலிய எண்ணற்ற சத்துகள் என் பட்டையிலிருக்கு.      என்னிடம் உள்ள மருத்துவ குணங்களைக் கருதியே இனிப்பில், மருந்தில், சோப்பில், பற்பசையில், மற்றும் உடம்பின் மேல் தெளிக்கும் வாசனைத் திரவியங்களில் என் பட்டையை சேர்க்கிறார்கள். 

அது மட்டுமா,  நீங்கள் விரும்பி  உண்ணும் தின்பண்டங்களான மிட்டாய், சூயிங்கம், கேக், ரொட்டி, பிஸ்கெட், சாக்லெட் ஆகியவையிலும் என் பட்டை கலந்திருக்கு. பயப்படாதீங்க, நான் உங்களுக்கு நன்மை தான் செய்வேன்.  என் பட்டையை மென்பானங்களிலும், மருந்து பொருள்களிலும், அழகு சாதனப் பொருள்களிலும், ஏன் கழிப்பறைகளிலும் கூட பயன்படுத்தறாங்க. 

என் பட்டை அஜீரணம், நெஞ்செரிச்சல், இருமல், சளி, ப்ளு காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, கீல்வாதம், மூட்டுவலி, மன இறுக்கம், மன அழுத்தம், பதட்டம், பல்வலி, நரம்புத் தளர்ச்சி ஆகிய நோய்களை நீக்கும்.  அதுமட்டுமல்ல மூளையின் நினைவாற்றலை அதிகரிப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கி எப்போதும் உங்களைப் புத்துணர்வோடு வைத்திருக்கும்.  என் பட்டை மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் காது கேளாமை சரியாகும். என் பட்டையை நன்கு பொடியாக்கி, தேன் மற்றும் சூடான ஆலிவ் எண்ணெய் கலந்து வழுக்கையாக உள்ளவர்கள் தலையில் தடவி 15 நிமிடம் வைத்திருந்தால் முடி வளருமென  ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. 

என் பூக்களின் காம்புகளிலிருந்தும், இலைகளிலிருந்தும் தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் செயற்கை முறையில் வெணிலா என்ற வாசனைப் பொருளா தயாரிக்கிறாங்க. என் மரத்தின் இலைகளும் மணம் நிறைந்தது. அந்த இலைகள் தான் அசைவ உணவுகள் மணக்க பயன்படுத்துகிறார்கள்.  நன்றி, குழந்தைகளே. மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.