முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: பழங்குடி மக்களின் துணைவன் மக்னோலியா மரம்

நான் தான் மக்னோலியா மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் மக்னோலியா கிரேன்டிபுளோரா என்பதாகும். நான் மக்னோலியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.

Updated On : 27 மார்ச், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:21 AM

குழந்தைகளே நலமா?

நான் தான் மக்னோலியா மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் மக்னோலியா கிரேன்டிபுளோரா என்பதாகும். நான் மக்னோலியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் தென் கிழக்கு அமெரிக்கா. நான் இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் அதிகமாக இருக்கேன். என்னை இங்கு ஊத்தாம்பல் என்று அழைக்கிறாங்க. அதற்கு தாமரை மரம் என்று பொருள். என்னை அழகுத் தமிழில் மலைமகுட மரம் என்று சொல்றாங்க. நான் அழகிய நறுமணப் பூ மரமாவேன். ஒரு காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகம் காணப்பட்டேன். இப்போது நான் அங்கு இல்லை.

நான் ஒரு பசுமை மாறா மரமாவேன். நான் 30 மீட்டர் உயரம் வரை வளருவேன். என் இலைகள் 12 முதல் 25 சென்டி மீட்டர் நீளமிருக்கும். பத்து சென்டிமீட்டர் அகலத்தில் பசுமையாக, செம்மை நிறமாக இருக்கும். என் பூக்கள் பெரிதாக இருக்கும். என் பூக்கள் மிகவும் நறுமணம் மிக்கது. மேலும், பூக்களிலிருந்து சாறு எடுத்து நறுமணப் பொருள்களைத் தயாரிக்கிறார்கள். தென்கிழக்கு அமெரிக்க மக்கள் என் பூக்களிலிருந்தும், பழங்களிலிருந்தும் ஊறுகாய் செய்து சாப்பிடுகிறார்கள். அங்கு என்னை அழகு மரமாகவும் வளர்க்கிறார்கள். காய்ந்த என் இலைகள் உணவுக்கு மணத்தையும், சுவையையும் கொடுக்கும்.

Advertisement

அமெரிக்க நாட்டின் பழங்குடிகள் என் மரத்திலிருந்து நோய்த் தீர்க்கும் பல மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். என் பழங்களைத் தொடர்ந்து உண்டு வந்தால் பக்கவாதம், மூட்டுவலி, தசைவலி பறந்து போகும். காய்ச்சல், ஜலதோஷம், உடல் பருமன், ஆஸ்துமா, தலைவலி, ப்ளு ஜுரம் இருந்தால் என் பட்டைகளை வெந்நீரிலிட்டு அருந்தினால் இவை இருந்த இடம் தெரியாது. என் பூக்களிலிருந்தும் பல மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து
வருகிறார்கள்.

குழந்தைகளே நான் ஒன்று கேள்விப்பட்டேன் அது உண்மையா ? அதாவது அடர்வனம் எனப்படும் மியாவாக்கி காடுகளை, அரசு மக்கள் நலன்களுக்காக உருவாக்கி வருகிறதாமே. நல்லது, ரொம்ப மகிழ்ச்சி குழந்தைகளே. மியாவாக்கி முறையில் மரங்கள், காடுகள் வளர்ப்பது என்பதானது, ஒரு சிறிய இடத்தில் அதிக அளவில் நன்மைத் தரும் மரக்கன்றுகளை நடவுச் செய்தல் என்பதாகும். இந்த வகை காடு வளர்ப்பினால் உங்களுக்கு கிடைக்கப் போகும் பயன்கள் எண்ணிலடங்கா. பல்லுயிர் பெருக்கத்திற்கான சூழல் கிடைக்கும், உங்களுக்குத் தேவையான பிராண வாயு அதிக அளவில் உற்பத்தியாகும், மரங்கள் தங்கள் வேர்களில் நீரை சேமித்து வைத்துக் கொள்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தண்ணீர் பஞ்சம், பஞ்சாய் பறந்திடும்.

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர், ஐயா அகிரா மியாவாக்கி என்பவர் தொழிற்சாலைகள், வெப்பம் அதிகமாக உள்ள நகர்ப்புறங்களில் காடுகளை வளர்த்தால் வெப்பமயமான சூழலிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதை தனது ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளார். அவர் ஜப்பான் மட்டுமின்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் தன் அயாராத முயற்சியால் 1500 மியாவாக்கி காடுகளை உருவாக்கியிருப்பதாக சொல்றாங்க.

காடுகள், மரங்களை அழிப்பதால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுவதை அறிந்த அரசு, அதற்கு தீர்வு காணும் முயற்சியாக குறைந்த நிலத்தில் அதிக அளவு சுற்றுச்சூழலைக் காக்கும் மரங்களை இந்த மியாவாக்கி முறை மூலம் ஆங்காங்கே நகர்ப்புறங்களில் அடர்வனங்களை ஏற்படுத்திக்கிட்டு வராங்க. இந்த மியாவாக்கி காடுகளை உருவாக்க குறைந்த இடமே போதுமானதுங்க. ஏன், உங்கள் வீட்டின் கொல்லைபுறத்தில் கூட உருவாக்கலாமுன்னு மியாவாக்கி ஐயா சொல்றாரு. நன்றி ஐயா. இதனால் வீட்டில் பசுமை அதிகமாகி வெப்ப நிலை குறைவதோடு, நாட்டின் வெப்ப நிலையும் குறைந்து, மண் வளமும் பெருகும். அதனால, மழையும் அதிகரிக்கும், மண் வளமும் பெருகி, நிலத்தடி நீர்மட்டமும் உயரும். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.