சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான். அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார். அவனை அசைத்துப் பார்த்தார். அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகட்டினார்...!
மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கி குதிரை மீது ஏற்றினார். குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது! திகைத்துப் போனார் சாது! அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு...!
குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்.
அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்...!
சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார். திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான். சாது மெல்லச் சிரித்தார்...!
""உஷ்!....சொல்லாதே!'' என்று உதடுகளின் மீது கையை வைத்துச் சொன்னார் சாது.
திருடன் மிரண்டான்! ""எது? என்ன?'' என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டி, பயந்துபோய் குதிரையை அவரிடம் ஒப்படைக்க முயன்றான்.
சாது திருடனிடம், ""குதிரையை நீயே வைத்துக்கொள்! ஆனால், நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே!... ஏன் தெரியுமா?... மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்...என்னால் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை வாங்கி விட முடியும்! ஆனால் தீயவன் ஒருவன் தவறு செய்ய நல்லவர்கள் பலர் உதவியின்றித் தவிப்பார்கள்!''
திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது...!!
குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விடாதீர்கள்...!
நீதி : நல்லோரை இழந்து விடாதீர்கள்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.