ஆலமரம்
உயர்ந்து விரிந்த ஆலமரம்
ஒன்றாய் பறவைகள் கூடுமிடம்!
வியந்து பார்க்கச் செய்யும்மரம்
விழுதுகள் விட்ட ஆலமரம்!
பவழம் போலே பழம் பழுக்கும்
பார்க்க அழகாய்ப் பளபளக்கும்!
எவரும் தங்க நிழல் கொடுக்கும்
எருது பசுக்கள் ஓய்வெடுக்கும்!
அரசுப் படைகள் வந்து தங்கும்
அடர்ந்த நிழலைக் கொண்டிருக்கும்!
குரங்குக் கூட்டம் ஊஞ்சலாடும்
கிளிகள் கீச்சொலி கேட்டிருக்கும்!
Advertisement
ஊஞ்சல் ஆடி விழுதுகளில்
உள்ளம் களிப்பார் சிறுவர்களே!
ஓய்ந்து பயணக் களைபாற்ற
உதவும் வழியில் ஆலமரம்!
வயது முதிர்ந்த காலத்திலே
வளர்ந்து தாங்கும் விழுதாவீர்
என்றே நமக்குப் போதிக்கும்
இனிய பாடம் ஆலமரம்!