அதிசயம்...
பீகாரில் உள்ள சிறிய கிராமமான பக்கோராபூரைச் சேர்ந்த சத்யம் குமார், ஐ.ஐ.டி.- ஜே.இ.இ.யில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்ததுடன் அதிக மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
பீகாரில் உள்ள சிறிய கிராமமான பக்கோராபூரைச் சேர்ந்த "குழந்தை மேதை' சத்யம் குமார், நாட்டின் மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான ஐ.ஐ.டி.- ஜே.இ.இ.யில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்ததுடன் அதிக மதிப்பெண்களும் பெற்றுள்ளார். "வரலாற்றில் மிக குறைந்த வயதிலான ஐஐடி மாணவர்' என்ற வரலாற்றையும் படைத்ததோடு, அவர் தனது இருபத்து நான்காவது வயதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
1999-ஆம் ஆண்டு ஜூலை 20-இல் பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் பக்கோராபூரில் விவசாயக் குடும்பத்தில் சத்யம் குமார் பிறந்தார். இவர் சிறு வயதிலிருந்தே தனது கல்வித் திறமையை பல தருணங்களை வெளிப்படுத்தி வந்தார். இவரது அறிவுத்திறனை வியந்த, அவரது குடும்ப நண்பரோ சத்யத்தை ராஜஸ்தானில் உள்ள கோட்டா பயிற்சி மையத்தில் சேர்த்தார். அங்கு ஐ.ஐ.டி- ஜே.இ.இ. தேர்வுக்குத் தயாரானார்.
2012-இல் சத்யம் குமார் தனது முதல் முயற்சியிலேயே ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 2013-இல் மீண்டும் அதே தேர்வை எழுதி 360 மதிப்பெண்களுக்கு 292 மதிப்பெண்களைப் பெற்று தனது தரவரிசையை 670- ஆக உயர்த்திக் கொண்டார்.
Advertisement
இதையடுத்து, ஐ.ஐ.டி. கான்பூரில் மின் பொறியியலில் பி.டெக், எம். டெக் இரட்டைப் பட்டமும் பெற்றார். பின்னர், அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் முனைவர் பட்டமும் பெற்றார். தற்போது, டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பொறியாளராகப் பணிபுரிகிறார்.