முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உணவே மருந்து!

உணவே மருந்து; மருந்தே உணவு என்பது நமது பாரம்பர்யம். அதைப் போற்றும் வகையில் நமது மண் சார்ந்த சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊட்ட சத்து பானத்திற்காக பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தேசிய அளவில்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:10 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:08 PM

உணவே மருந்து; மருந்தே உணவு என்பது நமது பாரம்பர்யம். அதைப் போற்றும் வகையில் நமது மண் சார்ந்த சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊட்ட சத்து பானத்திற்காக பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தேசிய அளவில் விருது பெற்றவர்கள் இந்தச் சகோதரிகள்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த ஆர். ராமலட்சுமி, ஆர். கமலாதேவி ஆகியோர்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளனர். மிகச் சிறிய வீட்டில் வாழ்ந்துவரும் அச்சகோதரிகளுக்கு, தாங்கள் சிறுவயதில் வாங்கிய விருதுகளையும், சான்றிதழ்களையும் சரியாகப் பராமரிக்கக் கூட முடியாத சூழ்நிலை.அவர்களைச் சந்தித்து சாதனை விவரத்தைக் கேட்டறிந்தோம்.

உங்கள் பெற்றோர் பற்றி?

Advertisement

தந்தை ஆர். ராஜரத்தினம், அஞ்சல்துறை கடைநிலை ஊழியர். தாய் வீராத்தா சத்துணவு ஊழியர்.

எந்தப் பள்ளியில் படித்தீர்கள்..?

சிவகாசியில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டச் சிறப்புப் பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோம்.

சத்துபானம் குறித்து ஆய்வுசெய்யும் எண்ணம்

எப்படி வந்தது..?

தேசியக் குழந்தைகள் அறிவியல் இயக்கம் சார்பாக "உணவே மருந்தே' என்னும் தலைப்பில் பள்ளிக் குழந்தைகளை ஆய்வு செய்யச் சொன்னார்கள். இந்த ஆய்வில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளியில் படித்த நாங்களும் பங்கேற்றோம். எங்களைப் பயிற்சி பெற்ற ஆசிரியர் வழி நடத்தினார். "என்ன ஆய்வு செய்யப்போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து எனக்குச் சொல்லுங்கள்' என்றார் எங்களின் ஆசிரியர்.

நம் நாட்டில் குழந்தைகளுக்குப் போதிய சத்துணவு கிடைக்கவில்லை எனப் பத்திரிகைகளில் படித்தோம். எனவே, குறைந்த செலவில் சத்துபானம் தயாரிக்க வேண்டும் எனத் தோன்றியது. எங்களின் முடிவை ஆசிரியரிடம் தெரிவித்தோம். அவரும் எங்களுக்கு உற்சாகமாக உதவத் தொடங்கினார். ("ஐந்து பேர் கொண்ட மாணவர்கள் குழுவுக்கு ராமலட்சுமிதான் தலைமையேற்றார்' என்றார் கமலாதேவி).

அரிசி, வரகு, தினை, சாமை, ராகி,கம்பு உள்ளிட்ட தானியங்களும், சர்க்கரையையும் மூலப்பொருள்களாகக் கொண்டு நாங்கள் தயாரித்த சத்து மாவிற்குக் "குறைந்த விலையில் நிறைந்த சத்துக்கள் அடங்கியது' என்று

மருத்துவர்கள் சான்றளித்தனர்.

மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறந்த சத்து பானமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் தேசிய அளவிலும் வென்ற எங்களின் கண்டுபிடிப்புக்குத் தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்கம் சார்பில் மைசூரில் 2002-இல் நடைப்பெற்ற விழாவில் சிறந்த பானத்திற்கான விருது வழங்கப்பட்டது. அப்போது நாங்கள் ஐந்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். இதற்காக நாங்கள் பெற்ற சான்றிதழ் இன்றைக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கின்றது.

விருது கிடைத்ததும் எப்படி உணர்ந்தீர்கள்..?

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனி வாழ்வில்

ஏற்றம் வரும் என எதிர்பார்த்தோம்..! ஏமாந்தோம்..! எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ரோட்டரி, அரிமா உள்ளிட்ட சங்கங்கள் பாராட்டி பரிசுகளை வழங்கின. நாங்கள் கண்டுபிடித்துள்ள சத்து பானத்தை வியாபார ரீதியில் கொண்டு செல்ல உதவி செய்கிறோம் எனச் சில அரசியல் கட்சியினர் கூறிச் சென்றதோடு சரி. எங்கள் படிப்பிற்கு கல்வி உதவித் தொகை கூட கிடைக்காமல் சிரமப்படுகிறோம். யாரேனும் உதவ முன்வந்தால் இந்த பானத்தை வியாபார ரீதியாக பிரபலப்படுத்த முடியும்.

என்ன படிக்கிறீர்கள்..?

நான்(ராமலட்சுமி) பாராமெடிக்கல் கல்லூரியில் லேப் டெக்னீஷியன் கோர்ஸ் படிக்கிறேன். கமலாதேவி, பாலிடெக்னிக்கில் கணினிப் பொறியியல் படிக்கிறாள். நான் உயிரியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளவும், கமலாதேவி, கணிப்பொறியாளராகி நல்ல நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் நினைக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.