முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சவால்களைச் சமாளித்தால் வெற்றி பெறலாம்!

ஒரு சதுர பலகைக்குள்தான் எத்தனை போர்? யானைகள் என்ன, குதிரைகள் என்ன, சேனைகள் என்ன, மந்திரிகள், ராஜாக்கள், ராணிகள்... எத்தனை வீச்சுகள், எத்தனை வீழ்த்தல்கள்? சதுரங்கப் பலகையில் சரிந்துபோன ராஜ்ஜியங்கள் எத்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:39 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:31 PM

ஒரு சதுர பலகைக்குள்தான் எத்தனை போர்? யானைகள் என்ன, குதிரைகள் என்ன, சேனைகள் என்ன, மந்திரிகள், ராஜாக்கள், ராணிகள்... எத்தனை வீச்சுகள், எத்தனை வீழ்த்தல்கள்? சதுரங்கப் பலகையில் சரிந்துபோன ராஜ்ஜியங்கள் எத்தனை? செஸ் விளையாட்டில் காய்களை நகர்த்துவதில் திறமையாக செயல்படுபவர்கள்தான் வெற்றி பெறமுடியும். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிளஸ் 2  படிக்கும் மாணவி ஆர். விசாலாட்சி (17), அப்படி பல ராஜ்ஜியங்களை வீழ்த்தியவர். செஸ் விளையாட்டில் சிறப்பாக விளையாடி இன்று ஆசிய செஸ் விளையாட்டில் பங்கேற்க, இந்தியாவுக்காக தமிழ்நாடு செஸ் கழகத்தாரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் பேசினோம்...

* எந்த வயதில் செஸ் விளையாடத் துவங்கினீர்கள்?

Advertisement

எனது தந்தை எஸ்.டி. ரத்தினவேலு, தாய் அகிலாண்ட ஈஸ்வரி இருவரும் வீட்டில் பொழுதுபோக்கிற்காக அவ்வப்போது செஸ்  விளையாடுவது வழக்கம். எனவே, எனக்கு 4 வயது இருக்கும்போது, எனது பெற்றோர்கள் செஸ் விளையாட பயிற்சி அளித்தனர்.  பின்னர், எனக்கு செஸ் விளையாட்டில் உள்ள ஈடுபாட்டைப் புரிந்துகொண்ட ராஜன் என்ற எனது பயிற்சியாளர், எனக்கு ஊக்கமளித்தார். சவாலான இந்த விளையாட்டில், சவால்களை சமாளித்து எப்படி வெற்றி பெறுவது என்பதைத் தெரிந்து கொண்டேன். மேலும், தோல்வி என்பது ஒரு இடறல்தான் என்பதையும் புரிந்து கொண்டேன்.

முதன்முதலில் எந்த வயதில் போட்டியில் பங்கு பெற்றீர்கள்?

இரண்டாம் வகுப்பு படிக்கும்போது 8 வயதினருக்கான பிரிவில் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றேன். ஆனால், அதில் பரிசு எதுவும் பெறவில்லை.எனினும், துவண்டுவிடாமல் விடாமுயற்சியுடன் விளையாடி, அதே ஆண்டு மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 3-ம் இடமும், தேசிய அளவில்  9-ம் இடத்தையும் பெற்றேன். ஒரே ஆண்டில் தேசிய அளவுக்கு முன்னேறி, 8 வயதினருக்கான பிரிவில் பங்கேற்றதை இப்போது நினைத்தாலும் சந்தோஷமாக உள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான அந்தப் போட்டியில்,  பெரிய விளையாட்டு வீரர்களைக் கண்டு மிரளக்கூடாது என்று புரிந்து கொண்டேன். மேலும்,  எந்த நிமிடத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே, தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது.

இதுவரை எத்தனை போட்டிகளில் பங்கு பெற்றுள்ளீர்கள்?

நூற்றுக்கணக்கான போட்டிகளில் பங்கு பெற்றுள்ளேன். 8 வயது பிரிவில் தேசிய அளவில் பங்கேற்ற பின்னர், 15 வயது வரை மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டேன். சென்னையில் நடைபெற்ற 15 வயது பிரிவினருக்கான போட்டியில், மாநில அளவில் 3-ம் இடம் பெற்றேன். பின்னர், புது தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 16-வது இடத்தைப் பெற்றேன்.

தேசிய அளவில் 15, 16, 17 வயது பிரிவினருக்காக சிந்துதுர்க் எனுமிடத்தில் நடைபெற்ற போட்டியில், 5 பேர் கொண்ட தமிழ்நாடு குழுவில் இடம் பெற்றிருந்தேன். இதில், தங்க மெடல் பெற்றேன். பின்னர், ஹரியானா மாநிலம் குர்ஹான் என்னுமிடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குழுப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றேன். அதேபோன்று, ஆந்திர மாநிலம் தாடைப்பள்ளியில் தேசிய அளவில் 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 17-வது இடத்தைப் பிடித்தேன்.

இந்த ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான 17 வயது பிரிவினருக்கான போட்டியில்  3-ம் இடம் பெற்றுள்ளேன். விரைவில், ஆசிய அளவில் நடைபெற உள்ள செஸ் போட்டியில் விளையாட இருக்கிறேன். இதில் பங்கேற்க, தமிழ்நாடு செஸ் கழகம் என்னைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

மேலும், இந்த மாதம் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை குவாஹாத்தியில் நடைபெற உள்ள தேசிய சாம்பின்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் விளையாட இருக்கிறேன்.

எஸ். பாலசுந்தரராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.