முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நடிக்க வந்தடாக்டர்!

ஒவ்வொருவருக்கும் இந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆசை இருக்கும். ஆனால் வாழ்க்கை ஒவ்வொருவரையும் எங்கெங்கோ புரட்டிப் போட்டுவிடுகிறது. டாக்டராக வேண்டும் என்ற சின்ன வயதுக் கனவுகளோடு வ

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:39 PM
பகிர்:

வ்வொருவருக்கும் இந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆசை இருக்கும். ஆனால் வாழ்க்கை ஒவ்வொருவரையும் எங்கெங்கோ புரட்டிப் போட்டுவிடுகிறது. டாக்டராக வேண்டும் என்ற சின்ன வயதுக் கனவுகளோடு வளர்ந்த ஒருவர் மளிகைக் கடைக்காரராக மாறிவிடுவதும், விவசாயப் பின்னணியுடைய ஒருவர் கலையுலகில் கொடிகட்டிப் பறப்பதும் வாழ்க்கை நிகழ்த்தும் வினோதங்களில் சில.

சிறுவயதிலிருந்தே சினிமாவில் ஒளிவிட வேண்டும் என்ற ஆழமான கனவு சீனிவாசனுக்கு. ஆனால் அவர் அக்குபங்சர் டாக்டராக வேண்டும் என்று விதி சொல்லியது. சென்னையில் ஆனந்தி ஆஸ்பிட்டல் என்ற பெயரில் மல்ட்டி பர்பஸ் மருத்துவமனை ஒன்றை நடத்த விதி ஆணையிட்டது.

ஆனாலும் தனது கனவுகளிலிருந்து மீள சீனிவாசன் விரும்பவில்லை. காலம் கனியட்டும் என்று காத்திருந்தார். காலம் கனிந்தது.

இன்று டாக்டர் சீனிவாசன், லத்திகா சீனிவாசனாகிவிட்டார். தமிழில் உருவாகி வரும் "லத்திகா' படத்தின் ஹீரோ அவர்தான். அப்படத்தின் இயக்குநரும் அவர்தான்.மருத்துவத்திலிருந்து நடிப்பின் பாதைக்கு நடந்து வந்தது எப்படி என்று லத்திகா சீனிவாசனிடம் கேட்டோம்.

புன்னகை மாறா முகத்துடன் அவர் நம்மிடம் சொன்னதிலிருந்து....

""சினிமா உலக ஆசை எனக்குள் சிறுவயது முதலே கனன்று கொண்டிருந்தது. இருந்தும் மருத்துவம், பருப்பு, அரிசி வியாபாரம் என்று காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன். கனன்று கொண்டிருந்த எனது சினிமா ஆசையை விசிறிவிட்டவர் பானு என்ற என்னுடைய ஃபிரண்ட். "நீ ஏன் இன்னும் சினிமாவில் நடிக்கலை?' என்று போகிற போக்கில் அவர் சொல்லிச் சென்ற வார்த்தைகள், எனக்குள் நிகழ்த்திய மாற்றத்தின் விளைவுதான் அடுத்து சில மாதங்களில் சினிமா வாய்ப்பை எதிர்நோக்கிய எனது தேடல்கள்.

"உனக்காக ஒரு கவிதை', "இந்திரசேனா', "ஆனந்தத் தொல்லை' என வரிசையாக வெளிவந்த படங்களில் அடுத்தடுத்து நெகட்டிவ் ரோல்கள் எனக்குக் கிடைத்தன. ஆனாலும் சோர்ந்து போய்விடவில்லை நான். ஹீரோவாக நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சினிமாவின் நுட்பங்களை மெல்ல மெல்லக் கற்றுக் கொண்டேன்.

அதன் அழகியல் என் ரத்தத்தில் மெல்ல மெல்ல கலக்க ஆரம்பித்தது. நடிப்பு, இசை, பாட்டு, காட்சி அமைப்பு போன்ற எல்லாவற்றின் நுணுக்கங்களும் எனக்குத் தெரிய ஆரம்பித்தன. நானே ஒரு படத்தை இயக்கி, நடிக்க முடியும் என்ற நம்பிக்கை, எனக்குள் உறுதியாக வேர்விட்டு, விழுது பரப்பி, வளர ஆரம்பித்தது. அதன் விளைவுதான் "லத்திகா". டாக்டர் சீனிவாசனாக இருந்த நான் லத்திகா சீனிவாசனாக உருமாறிய பரிணாமம்  நிகழ்ந்தது இப்படித்தான்.

எனக்கு உதவியாக ரா.பரதன் திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, துணை இயக்கம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார். நடிகர் ரகுமான் வில்லனாக நடிக்கிறார். நான் மதுரையைச் சேர்ந்தவன். என்னுடன் நடிக்க நான் மதுரை மீனாட்சியை அழைத்து வரவில்லை. டில்லி மீனாட்சியை அழைத்து வந்திருக்கிறேன்.

படத்தின் ஷூட்டிங் நிறைவடையப் போகிறது. குழந்தைகள், பெரியவர்கள் எல்லாரும் ரசித்துப் பார்க்கக் கூடிய படமாக இது இருக்கும். ஒன்றுமட்டும் நிச்சயம். படம் வெளிவந்தபின் திரையுலகில் எனக்கான இடம் உறுதிப்படும். அந்த நம்பிக்கை எனக்குள் அழுத்தமாகப் பதிந்துள்ளது'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →