முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பணம் தரும் பாக்​கு​மட்டை!

இது பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வே

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:57 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:09 PM

து பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்; அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.

வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைவு? வீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பா. பிருந்தாதேவி  பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்து நம்மிடம் பேசினார்.

Advertisement

இந்தத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எனது கணவர் ஜி. பாண்டியராஜன் மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். நானும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்துவந்தது. என்ன தொழில் செய்யலாம் என தினசரி யோசித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் நூலகத்தில் தொழில் தொடர்பான புத்தகம் ஒன்றினை படித்தபோது, அதில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு குறித்து விளம்பரம் வந்திருந்தது. அதை படித்ததும் எனக்குள் ஓர் ஆர்வம் பிறந்தது. இந்தத் தொழில் நமக்கு சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. விளம்பரம் கொடுத்திருந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன். திருச்சியில் சென்று பயிற்சி பெற்று, சிவகாசியில்  காலினால் இயக்கும் நான்கு இயந்திரங்களை வாங்கி, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இத் தட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?

4 இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும். சொந்த இடத்திலேயே இரு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைத்தேன். மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன். அதன்மூலம், சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெற்றேன். இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றதால், 35 சதம் மானியம் கிடைத்தது. இந்த மானியம் கிடைத்ததால் நான் உற்சாகம் அடைந்தேன். இந்தத் தொழிலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. மூன்று பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அவர்களுடன் நானும் இரவு பகல் பாராது

கடுமையாக உழைத்தேன்.

பாக்குமட்டை தட்டில் நீங்கள் எத்தனை ரகங்கள் தயாரிக்கிறீர்கள்?

இதில் பல ரகங்கள் உள்ளன. நான் நான்கு அளவுகளில் தயாரிக்கிறேன். 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தட்டுகள் தயாரித்து வருகிறேன்.

இதற்கான மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

சேலம் மற்றும் தென்காசியிலிருந்து வாங்குகிறேன். அரசு இதற்கு வரிவிலக்கு அளித்துள்ளது வரவேற்

கத்தக்கது.

தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?

சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து எனக்குப் பயிற்சி அளித்தது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் மூலமாக, பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தி வருகிறோம்.

மேலும், தற்போது கோயில்கள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என நேரடியாக ஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்து வருகிறோம். நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது. சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.

இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ?

வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில். நான் தற்போது மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறேன். பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். என்னிடம் பயிற்சி பெற்று பலர், திண்டுக்கல், நாகர்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது.

உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?

பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன். இதன்மூலம் மேலும் வேகமாகவும் அதிக அளவிலும் தட்டுகளைத் தயாரிக்க முடியும். தற்போது, நான் மும்பை வரை தட்டுகளை அனுப்பிவருகிறேன். எதிர்காலத்தில் ஏற்றுமதியிலும் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.