முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குழிவிப்பாம்பு மீன்!

கடலில் வாழும் மீன் வகைகளில் பார்ப்பதற்குப் பாம்பு போலவே உடலமைப்பு உடையது தான் இந்தக் குழிவிப்பாம்பு மீன். கடலுக்குள் நீந்தி ஆராய்ச்சிகள் செய்யும் ஸ்கூபா டைவர்கள் இதன் பாம்பு போன்ற உடலமைப்பைப் பார்த்து

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:36 PM
பகிர்:

கடலில் வாழும் மீன் வகைகளில் பார்ப்பதற்குப் பாம்பு போலவே உடலமைப்பு உடையது தான் இந்தக் குழிவிப்பாம்பு மீன். கடலுக்குள் நீந்தி ஆராய்ச்சிகள் செய்யும் ஸ்கூபா டைவர்கள் இதன் பாம்பு போன்ற உடலமைப்பைப் பார்த்து பயந்து விடுவதும், இவர்களை இம்மீன்கள் பயமுறுத்துவதும் உண்டு. மற்ற சாதாரண மீன்களை விட இவற்றுக்கென்று பல்வேறு சிறப்புகள் இருப்பதாக கூறும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் தெரிவித்தது.

""ஆங்குயிலா என்பது இதன் விலங்கியல் பெயர். 2 அங்குலம் முதல் 12 அடி வரை வளரும் இவ்வினங்களில் சுமார் 800 சிற்றினங்கள் வரை இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். மற்ற மீன்களைப் பிடித்துச் சாப்பிடும் அசைவ உயிரினம். 25 கிலோ எடை வரை இருக்கும் நீளமான வகைகளும் உள்ளன. மற்ற சாதாரண மீன்களுக்கு இருப்பதைப் போல செதில்களோ,துடுப்புகளோ இருக்காது.

வாலின் நுனியானது பாம்புகளுக்கு இருப்பது போல பட்டையாகவும், உடலின் மேற்பரப்பில் அழகழகான டிசைன்களும் இருக்கும். சில வகைகள் சிங்கம், சிறுத்தை போன்ற உடலமைப்பிலும் கறுப்பு, சிவப்பு, நீலம் உள்ளிட்ட பல வண்ணங்களிலும் தென்படுகின்றன.இன்னும் சில தேன்கூடு வடிவிலும் காணப்படும்.

Advertisement

பவளப்பாறைகளின் இடுக்குகளில் உடலை மறைத்து வைத்துக் கொண்டும் தலையை மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டும் வாயைத் திறந்து வைத்துக் கொண்டே சின்னஞ்சிறு  மீன்களை எதிர்பார்த்து காத்திருக்கும். அந்த நேரத்தில் அதைப் பார்ப்பதற்கே பயங்கரமாகவும் பயமாகவும் இருக்கிறது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான முட்டைகளை இடுகின்றன.

முட்டைகளிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் கூட கடல் தண்ணீரில் சுதந்திரமாக நீந்தித் திரியும்.தண்ணீரில் மிதந்து வரும் அழுக்குகளான நுரைகளே இந்த லார்வாக்களின் விருப்ப உணவு. இவை சில நாளில் சின்னஞ்சிறு மீன்களாக உருமாறி அதன் வாழிடங்களுக்குச் சென்று கடலின் மிக ஆழத்திலும் கூட வாழ்கின்றன.

இந்த மீனின் ரத்தத்தை நாய்களுக்குச் செலுத்தி அதன் வீரியத்தையும், செயல்களையும் ஆராய்ந்த விஞ்ஞானி சார்லஸ் ரிச்சர்ட் என்பவர் மருத்துவத்துக்கான நோபல் பரிசும் பெற்றிருக்கிறார். இந்த மீனின் ரத்தத்தில் உள்ள புரோட்டீன் விஷத்தன்மை உடையதாக இருப்பினும் அதனை சமைக்கும் போது உண்டாகும் வெப்பத்தால் அது ஆவியாகி சென்று விடுவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

உலக அளவில் கடல் உணவுக்காக அதிகமாகச் சேகரிக்கப்படுகிறது. கிரீன் பீஸ் எனும் சர்வதேச அமைப்பு இதனை அழிந்து கொண்டே வரும் அரிய வகை உயிரினமாக அறிவித்திருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள பல அருங்காட்சியகத்தில் இவை மிகவும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. சில நாடுகள் இதனை மீன் பண்ணைகளிலும் வளர்த்தும் அறுவடை செய்கின்றனர்.

ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மிக அதிகமாக இவ்வகை மீன் இனங்கள் காணப்பட்டாலும் இவற்றை நம் பகுதி மீனவர்கள் யாரும் அதிகமாக பிடிப்பதில்லை. இவ்வகைகளில் பெரும்பாலானவை கடலின் அடியில் பூமிக்குள் உடலைப் புதைத்துக் கொண்டும் உயிர் வாழ்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.