மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?
மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து...
மேற்கு வங்க மாநிலத்தில், 2 ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹவுராவில் சாலை வலம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெற்றுள்ளது. மேலும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் ஏப். 29 அன்று நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற வேளையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, 2 ஆம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு ஹவுராவில் இன்று சாலை வலம் மேற்கொண்ட பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களுக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இத்துடன், மதுராபூர் மற்றும் கிருஷ்ணாநகர் பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டார்.
அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:
“மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் வாக்களித்துள்ளது. அக்கட்சி வங்கப் பெண்களுக்கு அநீதி இழைத்துள்ளது. வங்கம் என்பது துர்கை வழிப்படப்படும் புண்ணிய பூமி.
இந்த மண்ணில் பெண்களின் கண்ணியத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் இழைத்துள்ள அவமானங்களுக்கும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளுக்கும் உங்களின் ஒரே ஒரு வாக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்யும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் மாலை 6 மணிநிலவரப்படி 91.74% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.