முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி!

தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் வாலிபால்,கூடைப்பந்து, கபடி, வாள்வீச்சு, சிலம்பம் போன்ற விளையாட்டுக்களில் தடம் பதித்து வருகிறார்கள். எங்களாலும் விளையாட்டில் சாதிக்கமுடியும் என முத்திரை பதித்து வருவ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 3:44 AM
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:57 AM

தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் வாலிபால்,கூடைப்பந்து, கபடி, வாள்வீச்சு, சிலம்பம் போன்ற விளையாட்டுக்களில் தடம் பதித்து வருகிறார்கள். எங்களாலும் விளையாட்டில் சாதிக்கமுடியும் என முத்திரை பதித்து வருவது இக்காலப் பெண்களின் தனிச்சிறப்பு. இதற்குத் தகுந்த உதாரணமாக விருதுநகரைச் சேர்ந்த எஸ். தேவி ஐஸ்வர்யா லட்சுமி, எஸ்.ஸ்ரீஜா ஆகியோர் திகழ்கின்றனர். இந்த இளம் வீராங்கனைகள் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 3-வது தேசிய ரூரல் டெவலப்மெண்ட் விளையாட்டுப் போட்டியில் தமிழகம் சார்பில் கூடைப்பந்தாட்டத்தில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். ஒரு மாலைப்பொழுதில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த வீராங்கனைகளிடம் பேசியதில் இருந்து...

 எப்போது முதல் கூடைப்பந்தாட்டத்தில் பங்கேற்று வருகின்றீர்கள்?

 ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே இந்த விளையாட்டில் நாங்கள் பங்கேற்று வருகிறோம்.

Advertisement

 இந்த விளையாட்டில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

 இந்த விளையாட்டினை உடல் உழைப்பு மற்றும் மூளைத்திறனுக்குச் சவால் விடும் விளையாட்டாகத்தான் நாங்கள் கருதுகிறோம். இந்த விளையாட்டினை விளையாடும்போது, உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதை உணருகிறோம். எனவே இந்த விளையாட்டில் ஆர்வம் வந்தது. விளையாடத்தொடங்கிவிட்டால், வெற்றி ஒன்றே இலக்கு என நினைத்து விளையாடுவோம். கவனத்தை வேறு எதிலும் சிதறவிடுவதில்லை. எனவே எங்களால் வெற்றி பெறமுடிகிறது.

 தமிழக அணிக்காக விளையாடிய 12 பேரில் நீங்கள் இருவரும் இடம்பெற்றது எப்படி?

 போட்டி என்றால் மட்டும் பயிற்சி பெறுவது என்றில்லாமல் தினசரி காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் பயிற்சி செய்து வருகிறோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விருதுநகர் மாவட்ட பயிற்சியாளர் சுஜாதா எங்களுக்குத் தீவிர பயிற்சி அளிக்கிறார். மேலும், நாங்கள் படித்துவரும் விருதுநகர் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.எஸ்.சிதம்பரநாடார் சீனியர் பள்ளி நிர்வாகத்தினர் எங்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். எனவே எங்களால் தமிழக அணிக்கு விளையாட முடிந்தது.

 படிப்பில் எப்படி?

 விளையாட்டு நேரத்தில் முழுமூச்சுடன் விளையாடுவோம். படிக்கும் நேரத்தில், பாடங்களில் கவனம் செலுத்துவோம். எனவே படிப்பிலும் முதலிடம் பெற்று வருகிறோம். தினசரி நடத்தும் பாடங்களைப் படித்துவிட்டால் தேர்வு வரும் போது சுலபமாக எழுதிவிடலாம்.

 ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய போட்டியில் எந்தெந்த மாநில அணிகளுடன் விளையாடினீர்கள்?

 ஜம்மு - காஷ்மீர், கர்நாடகம்,ஹரியானா ஆகிய அணிகளுடன் இந்தப்போட்டியில் விளையாடினோம். இறுதிப்போட்டியில் ஹரியானாவிடம் தோற்றதால், வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றோம். கூட்டுமுயற்சியால் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது.

 உங்களுடைய எதிர்கால லட்சியம் என்ன?

 இந்திய அணியில் இடம்பெற்று, வெளிநாடு சென்று விளையாட வேண்டும். பெண்களாகிய எங்களின் திறமையை உலகறியச் செய்வதே எங்கள் லட்சியமாகும்.

 இப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றது குறித்து...?

 இறுதிப்போட்டியில் நுழைந்தும் கடும்குளிர், பழக்கம் இல்லாத உணவு வகைகள் காரணமாக இரண்டாமிடம் பெற்றது வருத்தமான விஷயம்தான்.

 பயிற்சியாளர் சுஜாதாவிடம் இந்த வீராங்கனைகள் குறித்துக் கேட்டோம்:

 ""தேவி, முன் கள விளையாட்டு வீராங்கனை. பந்து அவரிடம் கிடைத்தால், அதை கூடைக்குள் செலுத்துவதில் திறமைசாலி. ஸ்ரீஜா உயரமாக இருப்பதால் எதிரணியினர் அவரைப் பார்த்து பயப்படுவார்கள். எதிரணியினர் தடுக்காதவாறு பந்தைக் கடத்திச் செல்வார். இருவரும் சிறப்பாக,முனைப்புடன் விளையாடக் கூடியவர்கள்''என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.