பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
அரசியல் நாகரிகமின்றி பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது
அரசியல் நாகரிகமின்றி பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பேசிய விடியோவை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளதாவது:
’’ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நாடு முழுவதும் தீவிரவாதிகளை எளிதாக ஊடுருவ விட்டதில் தொடங்கி ஜார்ஜ் சோரோஸ் போன்ற அந்நிய நாட்டு சக்திகளிடம் கைகோர்த்து தேசத்தின் பாதுகாப்பைக் களவாட முயற்சித்த காங்கிரஸ் கட்சிக்கு தேசத்தைக் கட்டுக்கோப்பாகக் காத்து, சமத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் தன்னிகரில்லாத் தலைவரைக் கண்டால் எரிச்சல் வருவது இயல்பானது தான்.
Advertisement
ஆனாலும், தேசத்தின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஒருவரைக் குறித்து, எந்தவொரு அரசியல் மாண்புமின்றி கொச்சையாகப் பேசும் அளவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி முற்றிவிட்டதா? அல்லது சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி பயம் முற்றிவிட்டதா?
எதுவாயினும், காங்கிரஸ் கட்சியினரின் தரம் கெட்ட பேச்சை ஏற்றுக்கொள்ளமுடியாது. அமைதிக்கான தூதுவர் என உலகமே போற்றும் பெருந்தலைவரைக் குறித்து வாய்க்கூசாமல் அபத்தமான கருத்தை முன்வைத்ததற்கு மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையெனில் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.