விமானப் பணிப்பெண்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் தொடரில் அப்பாவி துளசிக்கு ஆதரவாக இருந்து, அம்மாவிடம் அடியெல்லாம் வாங்கும் பவித்ராவாக நடித்து வருபவர் சுஜி. சென்னை ஏ.ஆர்.எஸ். கார்டனில், சூட்டிங்கில் இருந்த அவரை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் தொடரில் அப்பாவி துளசிக்கு ஆதரவாக இருந்து, அம்மாவிடம் அடியெல்லாம் வாங்கும் பவித்ராவாக நடித்து வருபவர் சுஜி. சென்னை ஏ.ஆர்.எஸ். கார்டனில், சூட்டிங்கில் இருந்த அவரைச் சந்தித்து பேசினோம்.
இளவரசி தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி?
இளவரசி தொடரில் இப்பொழுது தான் கேரக்டர் ஆரம்பமாகியிருக்கிறது. அதில் கல்லூரிக்குப் போகும் பெண்ணாக நடித்திருக்கிறேன். என் கேரக்டர் பேரு நிர்மலா. சாய் பிரசாத்துக்கு ஜோடியாக வருகிற மாதிரியான கேரக்டர். இந்தத் தொடரை ரத்னம் சார் இயக்குகிறார். ஒவ்வொரு கேரக்டருக்கும் அவர் எதிர்பார்க்கிற நடிப்பு வரவில்லை என்றால் மறுபடியும் சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பார். என்னைப் போல வளரும் நடிகர்களுக்கு அது மிக உதவியாக இருக்கிறது.
தென்றல் தொடரில் வரும் பவித்ராவைப் பற்றி சொல்லுங்கள்?
தென்றல் தொடரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் தான் எனக்கு ஒரளவுக்கு நடிக்க வாய்ப்பு இருந்தது. அதன் பிறகு ஒரு சீன், இரண்டு சீன் வந்து சும்மா நின்னுக்கிட்டு இருப்பது போலத்தான் வரும். இனித்தான் என்னுடைய சீன்ஸ் ஆரம்பிக்கிறது.
அதுபோல இந்தத் தொடரில் நான் சும்மா வந்து நின்னுட்டு போனாலும் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. வெளியே எங்கு சென்றாலும் தென்றல் தொடரைப் பற்றித்தான் எல்லாரும் சொல்கிறார்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனர் குமரன் சாருக்கு தான் நன்றி சொல்லணும்.
இதைத் தவிர வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா?
தற்போதைக்கு வேறு தொடர் எதுவும் நடிக்கவில்லை. நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்.
பெரியதிரையிலும் நடிக்கிறீங்களா?
நான் ஒரு பெரிய திரை நடிகையாக வரவேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை. அவர்களுக்காகப் பெரிய திரையில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன். மற்றபடி இப்போதைக்குப் படங்கள் எதுவும் நடிக்கவில்லை. ஒரு படம் நடித்தாலும் நல்ல கதையாக அமையும் போது நடிக்கலாம் என்றிருக்கிறேன். ஆனால் தற்போதைக்கு சின்னதிரையில் தான் முழு கவனமும் செலுத்தி வருகிறேன்.
சின்னதிரைக்கு எப்படி வந்தீர்கள்?
அனுபல்லவி தொடரை இயக்கிக் கொண்டிருக்கும் மணிபாரதி சார் பி.எஸ்.என்.எல். விளம்பரம் ஒன்றை இயக்கப் போவதாகக் கேள்விப்பட்டு என் மாமாவின் நண்பர் மூலமாக அவரைப் போய்ச் சந்தித்தோம். வாய்ப்புக் கொடுத்தார்.
அதன் மூலம் தான் கவிதாலயா புரடக்ஷனில் உருவான தேன்மொழியாள் தொடரில் சமுத்திரகனி சார் என்னை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு "செந்தூரப் பூவே' தொடரில் நடித்தேன். கஸ்தூரி தொடரிலும் நடித்திருக்கிறேன். இதைத் தவிர கொஞ்ச நாள் கலைஞர் டிவியில் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன்.
உங்கள் நடிப்பை பார்த்துவிட்டு வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள்?
தென்றல் தொடரில் பார்த்தீங்கன்னா என் அக்கா துளசியை, அம்மா ரொம்ப கொடுமை படுத்துவாங்க அவங்ககிட்ட இருந்து அக்காவுக்கு சப்போர்ட் பண்ணுகிற மாதிரியான கேரக்டர் எனக்கு. அதற்காக என் அம்மாவிடம் அடியெல்லாம் வாங்கியிருக்கேன். நான் எங்க வீட்டுக்கு ரொம்ப செல்லம். அதனால தொடர்ல அடி வாங்குவது போல சீன் வரும்பொழுது எங்கம்மா பார்க்கவே மாட்டாங்க. அதன் பிறகு நடிப்பு தானேன்னு சாதாரணமா எடுத்துக்குவாங்க.
உங்களைப் பற்றி?
நான் பி.ஏ. ஆங்கிலம் படித்திருக்கிறேன். அதை முடித்து விட்டு விமான பணிப்பெண் பயிற்சி எடுத்திருக்கிறேன். எங்க வீட்டுக்கு நான் ஒரே பெண். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா என்று கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம்.