அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தை அடுத்த காட்டுப்பகுதியில் அவ்வப்போது தமிழகத்தையே உறையச் செய்யும் சம்பவங்கள் நடக்கும். சுற்றிலும் முந்திரிக்காடு.
இன்று இந்த கிராமத்தில் பட்டதாரிகள் இல்லாத வீடுகள் இல்லை. அரசுப் பணியாளர்கள் அதிகம் கொண்ட கிராமங்களில் பொன்பரப்பியும் ஒன்று என்ற நிலை உருவாகியுள்ளது. அலுவலக உதவியாளர் முதல் ஆட்சிப்பணியாளர் (கலெக்டர்) வரை பல்வேறு உயர் பதவிகளை அலங்கரித்தவர்கள் பொன்பரப்பியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
இந்த பெருமைக்கு இவ்வூர் பள்ளியே முக்கியக் காரணமாகும். 1949-ல் உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது, 1956-ம் ஆண்டு தட்டச்சு, தச்சு மற்றும் இயந்திரவியல் ஆகிய பிரிவுகளைக் கொண்ட பன்னோக்கு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
வானம் பார்த்த பூமி; விவசாயமும் வியாபாரமும் மக்களின் நம்பிக்கை. ஆனால் இந்தப் பகுதியினருக்கு தொழிற்கல்வி பிரிவுகள் இன்றும் பலனளித்து வருகின்றன. இப்பிரிவுகளில் படித்து நெய்வேலி அனல்மின் நிலையம், பாரத மிகுமின் நிலையம் (பெல்) உள்ளிட்ட நிறுவனங்களில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். தச்சுத் தொழிலைக் கற்றவர்கள் சுயதொழிலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் இப்பள்ளி தொடங்கப்படும் முன்பாகவே உடையார்பாளையம், பெண்ணாடம் ஆகிய ஊர்களுக்குச் சென்று சிலர் படித்துள்ளனர்.
அரசுப் பணியில் இருக்கும் பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர்களில் அதிகப்படியானோர் ஆசிரியப் பணியில்தான் உள்ளனர்.
1949-ம் ஆண்டு பட்டதாரியான ராஜா என்பவர் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்தவர். இவரே பொன்பரப்பி கிராமத்தின் முதல் பட்டதாரி. இந்த கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளவர்கள். கல்வித் துறையில் மாவட்ட அளவிலான பதவிகளில் 8 பேர் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
ஆசிரியர் பயிற்சிக்கான படிப்புகளுக்கே கிராமத்தவர் முன்னுரிமை தருகின்றனர். ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மருமகள் ஆகிய நால்வரும் ஆசிரியப் பணியில் இருக்கும் குடும்பங்களும் இங்கு உண்டு. ஆசிரியப் பணியோடு வருவாய்த்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் நீதித்துறைகளிலும் இக்கிராமத்தினர் பணிபுரிந்து வருகின்றனர்.
பயன்தராத விவசாயம், பலன்தரும் வியாபாரம் என்ற நிலையில் உள்ள இப்பகுதிகளில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எப்படி?
முன்னாள் தலைமை ஆசிரியரும் இன்றும் சேவை நோக்கில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வீட்டில் ஆங்கிலப் பாடம் நடத்தி வரும் எம்.ஏ. பெருமாள் (78), எம்.ஏ. என்பது இவரது இனிஷியல் அல்ல. இவ்வூரில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மனிதர் இவர் என்பதால் எம்.ஏ. இவரது பெயரோடு ஒட்டிக் கொண்டது.
"என்னால் இந்தப் பள்ளி பெருமையடைகிறது. இந்தப் பள்ளியால் நான் பெருமையடைகிறேன்' என்று பள்ளிகளில் காலை நேர வழிபாட்டில் கூறும் வாசகம் இந்த பள்ளிக்கு பொருத்தமாகவே இருக்கிறது. ஏனென்றால் பள்ளியின் மூலம் ஒரு கிராமம் முழுமையான அளவில் பட்டதாரிகளைக் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.