முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கல்லிலே கலைவண்ணம் காணும் கமபோடியா!

கல்லிலே கலைவண்ணம் காணும் கம்போடியா என்றால் உடனே நினைவுக்கு

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

கல்லிலே கலைவண்ணம் காணும் கம்போடியா என்றால் உடனே நினைவுக்கு வருவது அங்கோர்வாட், அங்கோர்தாம் கோயில்கள். சமீபத்தில் கம்போடியாவுக்கு சுற்றுலா சென்றுவந்தோம்.

உள்நாட்டுப் போரினால் இன்னலுக்குள்ளான மக்கள் இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இருக்கிறார்கள். போரினால் மக்கள் தொகை மிகவும் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

மக்கள் பேசும் மொழி "கமீர்' எனப்படுகிறது. மக்களிடம் புழங்கும் பணத்தின் பெயர் "ரியல்'. நாட்டின் முக்கிய தொழில் விவசாயம்தான். நெல் விளைவதால் அரிசிதான் பிரதான உணவு. பிள்ளைகள் பள்ளியில் சமஸ்கிருதமும் படிக்கிறார்கள். பசுவை தெய்வமாக மதித்து வழிபடுகிறார்கள்.

1993- வரை மன்னர் ஆட்சிதான் நடந்திருக்கிறது. நாங்கள் சென்ற சமயம், 90 வயதுடைய மன்னர் இறந்து பத்து நாட்கள்தான் ஆகியிருந்தது. மூன்று மாதம் கழித்து அடக்கம் செய்வது அவர்களது வழக்கமாம்.

1993-க்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சிதான். தலைநகரை விரிவாக்கவும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றவும் முயற்சி செய்துவருகிறார்கள்.

12, 13-ஆம் நூற்றாண்டுவரை இந்து மதம் பரவியிருந்தது. பிறகு புத்த மதம் பரவி இந்து மதத்தின் இடத்தைப் பிடித்துள்ளது.

தலைநகரம் பினாம்பென் சென்றோம். 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை இன்றும் அழகிய அரண்மனையாகவே விளங்குகிறது. மன்னரின் உடல் அரண்மனையில் இருந்ததால் உள்ளே சென்று பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.

அடுத்து "சில்வர் பகோடா' என்னும் இடம். இதை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள். அரசர் பகுதி, புத்தர் கோயில், யானைகள் முற்றம், ஓவியங்கள் நிறைந்த பகுதி. அரசர் பகுதியில், அங்கோர்வாட் கோயில்களை முதலில் கட்ட ஆரம்பித்த மன்னர் சூரியவர்மனின் சிலை காணப்படுகிறது. சுற்றிவர பூக்கள் நிறைந்த தோட்டம். இங்கு அரச குடும்பத்தினரின் "பகோடா' எனப்படும் சமாதிகளும் காணப்படுகின்றது. அரசர், அவருடைய மனைவி, பெண் மற்றும் குடும்பத்தினருடைய அஸ்திகளை உள்ளே வைத்து, மேலே ஸ்தூபாக்களை கட்டியுள்ளனர். புத்தர் கோயிலில் எமரால்டு புத்தர் சிலை உள்ளது. கோயில் முழுவதும் வெள்ளிக்கற்களால் ஆனது. ஒவ்வொரு கல்லும் ஒன்றரை கிலோ வெள்ளியால் ஆனது. சுற்றிலும் பல்வேறு உலோகங்களாலான புத்தர் சிலைகள். சில சிலைகளில் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. புத்தர் பாதுகாப்பு, தியானம், உபதேசித்தல், காப்பாற்றுதல் என்று பல நிலைகளில் புத்தர் காணப்படுகின்றார். ஒரு

பகுதியில் அழகிய பூக்கள் தங்கத்திலும் வெள்ளியிலும் செய்துவைத்துள்ளார்கள். அடுத்து, "யானை' பகுதியில், நிறைய யானை சிலைகள், சிறியதும் பெரியதுமாய் உள்ளன.

ஒரு பகுதியில் ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளன. அரசருக்கு முடிசூட்டுதல், அரசர் பதிவியேற்றல் மற்றும் அரச குடும்பத்தினர் ஓவியங்கள் என்று பல ஓவியங்கள் உள்ளன.

அடுத்து நேஷனல் மியூஸியம் சென்றோம். உள்ளே நுழையும் போதே, கருடன் சிலை வரவேற்கிறது. 12-ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை கிடைத்த சிலைகள் எண்ணிக்கை சுமார் 18 ஆயிரம். அதில் இப்போது உள்ளவை சிவன், பிள்ளையார், முருகன், விஷ்ணு, ராமர், அனுமன், கருடன், லிங்கங்கள், வாலி-சுக்ரீவன் சண்டை... இன்னும் பல நுணுக்கங்கள் நிறைந்த சிலைகள் காணப்படுகின்றன.

மறுநாள் தலைநகர் பினாம்பென்னிலிருந்து "சியாம் ரீப்' என்னும் இடத்துக்குச் சென்றோம். அங்குதான் அங்கோர்வாட் கோயில்கள் உள்ளன. கம்போடியாவின் தேசியக் கொடியின் நடுவில் இந்தக் கோயில் படம்தான் இடம்பெற்றுள்ளது. இதை சிறந்த முறையில் புதுப்பித்திருக்கிறார்கள். இந்த கோயிலில் விஷ்ணு சிலை பெரியதாக காணப்படுகிறது. பூஜை கிடையாது. சுவரில் எங்கு பார்த்தாலும் தேவதை சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. பலவிதமான நடனத் தோற்றங்கள் காணப்படுகின்றன. சுவர்களில் ராமாயணக் காட்சிகள், அதில் வரும் கதாபாத்திரங்கள், ராவணனுடன் ராமன் போர் செய்வது, லட்சுமணன் போரில் மயக்கம் அடைந்தபோது அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்தது எனப் பல காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

பாரதக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பாரதப் போர், கண் எதிரில் நடப்பது போல் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. மன்னன் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்ட கோயில் இது.

அங்கோர்தாம் கோயில்: அங்கோர்வாட் ஆலயத்திலிருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் அங்கோர்தாம் ஆலயம் உள்ளது. இதைச் சுற்றி அகழி உள்ளது. ஏழாம் ஜெயவர்மன் என்னும் மன்னனால் உருவாக்கப்பட்டதாம். நான்கு முகம் கொண்ட கோபுரம் உள்ளது. அவை நான்கு திசைகளையும் நோக்கி உள்ளன. நுழைவாயிலுக்கு ஐந்து கதவுகள் உள்ளன. இங்கு சிலைகள் யாவும் பிரமாண்டமான சிற்பங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. சிற்பிகளின் திறமை வியக்கவைக்கிறது. அங்கோர் கோயில்கள் அனைத்தும் சிமெண்ட் பூச்சு இல்லாமல் சதுர வடிவக் கற்களால் கட்டப்பட்டுள்ளன.

ஜங்கிள் டெம்பிள்: 7-ஆவது ஜெயவர்மனால் அவரின் தாயாருக்காக கட்டப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்ட கோயில் இது. தூண்களில் நடனமாடும் அப்ஸரஸ்கள், மிருகங்கள், உருவங்கள் காணப்படுகின்றன. சுவர்களில் யானை, குதிரையில் சவாரி செய்யும் வீரர்கள், புத்தர் பல நிலைகளில் இருப்பதையும் பார்த்தோம். மீதி கோயில்களில் உள்ளவற்றை விட, அதிசயமான காட்சி ஒன்று பார்த்தோம். இந்த கோயிலின் உள்ளே "சில்க் காட்டன்' எனப்படும் மரங்கள் உள்ளன. வேர்கள் உறுதி வாய்ந்தவை. மரங்கள் வளர்ந்து, கோயிலின் பெரும்பகுதியை அழித்துவிட்டன. மூன்று மரங்கள் கோயிலின் மேல் சுவரில் விழுந்து, அவைகள் விழாமல் பாதுகாக்கின்றன.

இந்தியாவில் இருந்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வந்து, இக்கோயிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாய், குழந்தையைத் தழுவி இருப்பது போல், மரம் வேர்கள் இரண்டும், கோயிலை தழுவி சிதையாமல் பாதுகாத்து வருகிறது. வேர்கள், கோயிலுக்குப் பலமாக விளங்குகிறது. ஒரு வேரை எடுத்தால் கூட, கோயில் முழுவதும் சிதைந்து விடும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பேயோன் ஆலயம்: இந்த கோயிலின் கோபுரத்திலிருந்து உள்ளே இருக்கும் சிறு கோயில்களிலும் மேலே, நான்கு முகம் கொண்ட பிரம்மாவை செதுக்கியுள்ளார்கள். அடியில் தாமரைப் பூ காணப்படுகிறது. கோயில் சுவர்களில் படைவீரர்கள் போர் செய்வது போலும், கருடன் உருவமும் ஆஞ்சநேயர் உருவமும் பல இடங்களில் காணப்படுகின்றன.

கோயிலின் உள்ளே சுவாமி சிலை எதுவும் இல்லை. இடிபாடுகளே அதிகம். புதுப்பிக்கும் பணியில் ஜப்பான் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அடுத்து "மெளண்ட் குலான்' என்னும் இடத்தில் அமைந்துள்ள 1000 லிங்கங்களைப் பார்க்கச் சென்றோம். சுமார் 35 கி.மீ. தூரம் சென்று 1 1/2 கி.மீ. மலையில் ஏறி தண்ணீரில் காணப்படும் லிங்கங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். இங்கிருக்கும் அருவி நீர் கம்போடியர்களுக்கு புனிதமானது.

கம்போடியா வளர்ந்துவரும் நாடு. சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்துள்ளது.  வெளிநாட்டினர் அதிகம் வருகின்றனர். சைவ, உணவகங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவுகளும் தரமானவையே! அங்குள்ள சிறுமிகள் இந்தியப் பெண்களைப் பார்த்தால், பொட்டு, வளையல்களை ஆசையுடன் கேட்கிறார்கள். கண்ணாடி வளையல்களை நாங்கள் கொடுத்தோம். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.