முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மதுரை பாரதியின் கதை!

பாரதியை எத்தனை முறை, எந்த வடிவத்தில் படித்தாலும் அலுக்காது. உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்காக மதுரம் பூதலிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய சுப்பிரமணிய பாரதியின் கதை (இரண்டாம் பதிப்பு) அறிமுக நிகழ்ச்சி, திர

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

பாரதியை எத்தனை முறை, எந்த வடிவத்தில் படித்தாலும் அலுக்காது. உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்காக மதுரம் பூதலிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய சுப்பிரமணிய பாரதியின் கதை (இரண்டாம் பதிப்பு) அறிமுக நிகழ்ச்சி, திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் கடந்த ஞாயிறு மாலை நடைபெற்றது.

 புகை நடுவில், வாசவேஸ்வரம் போன்ற நாவல்களை தமிழில் எழுதிய கிருத்திகா, ஆங்கிலத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை இளைய தலைமுறைக்காக எழுதும்போது, தம்முடைய இயற்பெயரான மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலேயே எழுதினார் என்பது பலரும் அறிந்த செய்தியாக இருக்கலாம். அவருடைய தமிழ்ப் படைப்புகளில் இருந்த உயிர்த்துடிப்பு, ஆங்கிலத்திலும் இருந்தது. பாரதியின் கதையில் அவர் பாரதியின் வாழ்க்கையை மட்டும் வசன நடையில் வழங்கியிருப்பதோடு நிற்கவில்லை. சில கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

 ஒரு குடும்பத் தலைவியாக செல்லம்மா படும் பாட்டையும், இவர் தெய்வமா- மனிதனா என்று புரிபடாத புதிருக்கு விடை தெரியாத பெண்ணாக அவர் தவித்த தவிப்பையும், ஆசிரியை அனாயாசமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

 "சென்னையில் இருந்தால் கைது செய்யப்படுவீர்கள்...' என்கிறபோது செய்துவிட்டுப் போகட்டும் என்று துணியும் பாரதி, எழுதுவதற்குக் காகிதமும் பேனாவும் கிடைக்காது என்று சொல்லும்போதுதான் புதுச்சேரி செல்ல ஒப்புக்கொள்கிறார். மனைவியையும் குழந்தைகளையும் கடையத்துக்கு அனுப்பிவிட்டு, தனியாக இரவில் புதுச்சேரிக்கு ரயில் பயணம் செய்யும் பாரதியின் மன நிலையைப் படிக்கையில் மனம் வெதும்புகிறது. நூலில் பல நிகழ்ச்சிகள் விழிகளில் நீர் துளிர்க்க வைக்கின்றன. சில நிகழ்ச்சிகள் பாரதி குறித்துப் பெருமிதம் கொள்ள வைக்கின்றன.

 காந்திஜியைச் சந்தித்து, "மாலை கடற்கரைக் கூட்டத்துக்கு வரமுடியுமா?' என்று பாரதி கேட்பதும், மறு நாளைக்கு வேண்டுமானால் வருவதாக காந்தி தெரிவிப்பதும், அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து உடனே பாரதி வெளியேறுவதும், "இவரை நீங்கள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அப்படிச் செய்ய இந்த பூமியில் யாரும் இல்லையா? இவர் ஒரு பெரும் பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டியவர்...' என்று காந்திஜி ஒரு நிமிட மெüனத்துக்குப் பின் சொல்வதும் வரலாறாகிவிட்ட உண்மை.

 தமிழ்நாட்டுக்கு வெளியே பாரதியை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடு, மதுரம் பூதலிங்கம் எழுதிய இந்த நூலை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டிருக்கிறது. விலை மதிப்பற்ற இந்த நூலை ஆர்வத்தோடு கேட்பவர்களுக்கு இலவசமாகவே அளித்தார் மதுரம் பூதலிங்கத்தின் மகளும், வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் மனைவியுமான மீனா சுவாமிநாதன்.

 நூல் குறித்து ஷிகேஷ், மங்கை, கோபு முதலிய ஐந்து பேரைப் பத்து நிமிடங்களுக்குப் பேசுமாறு கூறினார் தலைமை ஏற்றிருந்த படைப்பாளி கே.ஆர்.ஏ. நரசய்யா. அதற்கு முன் அவரும், நூலுக்கு ஓவியங்கள் வரைந்து உதவிய ஓவிய மேதை கோபுலு அவர்களும், பாரதியின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதியும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதைப் பெரும் பேறாகக் கருதுவதாகக் கூறினார்கள். ராஜ்குமார் பாரதி, பாரதியின் ஒரு "காவடிச் சிந்து' பாடலைப் பாடினார்.

 டாக்டர் இந்திரா பார்த்தசாரதி, ஞாநி, இயக்குநர் ஞான ராஜசேகரன் முதலிய பாரதி அன்பர்கள் பங்குகொண்ட இந்த நிகழ்ச்சியை, ரோஜா முத்தையா நூலகம் ஏற்பாடு செய்திருந்தது. நூலகத்தைச் சேர்ந்த சுந்தர், நூல் அறிமுக வாய்ப்பை அளித்ததற்காக நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →