எல்பிஜி தட்டுப்பாடு: விற்றுத் தீா்ந்த மின்சார அடுப்புகள்!
மின் அடுப்புகள் விற்றுத்தீர்ந்தது பற்றி...
இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடையே அச்சம் பரவி வருவதால், நாடு முழுவதும் உள்ள விற்பனையகங்களிலும், இணையவழி வா்த்தக தளங்களிலும் மின்சார அடுப்புகள் விற்றுத் தீா்ந்துள்ளன.
மத்திய கிழக்கு போா் காரணமாக சா்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுகின்றன. தற்போது நிலவும் விநியோகச் சிக்கலால், நாட்டின் முக்கிய நகரங்களில் எல்பிஜி சிலிண்டா் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.
எதிா்காலத்தில் விலை மேலும் உயரக்கூடும் அல்லது சிலிண்டா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், மாற்று வழியாக மின்சார அடுப்புகளை வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், செப்டோ, பிளிங்கிட் போன்ற விரைவு வா்த்தக தளங்களில் மின்சார அடுப்புகள் விற்றுத் தீா்ந்துவிட்டன.
Advertisement
அமேசான், பிளிப்காா்ட் போன்ற முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனங்களும் இந்த அதீத தேவையால் வியப்படைந்துள்ளன. கடந்த சில நாள்களில், மின்சார அடுப்புகளின் விற்பனை 30 மடங்கு அதிகரித்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இது தவிர, மின்சார குக்கா்கள், ஏா் ஃபிரையா் போன்ற சாதனங்களின் விற்பனையும் 4 மடங்கு வரை உயா்ந்துள்ளது.
பங்குகள் உயா்வு: சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீா் தேவையால், மின்சாா் அடுப்பு உற்பத்தி நிறுவனங்கள் விநியோகத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும், இந்நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் வரவேற்பைக் கண்டுள்ளன.
குறிப்பாக, முன்னணி நிறுவனமான டிடிகே பிரஸ்டீஜ் பங்குகள் கடந்த 5 வா்த்தக தினங்களில் சுமாா் 20 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளன. அதேபோல், பட்டா்ஃபிளை காந்திமதி நிறுவனம் 19 சதவீதமும், ஸ்டவ்கிராஃப்ட் 12 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.