சிகாகோவில் விவேகானந்தர் சாலை!
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்த தின கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்றுவருகின்றது.
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்த தின கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்றுவருகின்றது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது, புகழ்பெற்ற சிகாகோ நகரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
சிகாகோ நகருக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. சுவாமி விவேகானந்தர் 1893- ஆம் ஆண்டு சிகாகோ நகரில் ஆற்றிய உரை மிகச் சிறப்பானது. "சகோதரிகளே... சகோதரர்களே...' என்று அவர் துவக்கி ஆற்றிய உரை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
உலகமே வியந்து போற்றிய உரை அது. சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன் நினைவாக சிகாகோ நகரில் அருங்காட்சியகம் உள்ள சாலைக்கு "விவேகானந்தர் சாலை' என்று பெயரிட்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி!
Advertisement
சிகாகோ நகரிலிருந்து அரைமணி நேரம் பயணம் செய்தால் ஸ்ரீ ராமகிருஷ்ணர் உலகத் திருக்கோயிலை அடையலாம். அழகிய, அமைதியான சூழ்நிலையில் அமைந்திருப்பதைக் காணலாம்.
1993-ஆம் ஆண்டு சுவாமி சித்தானந்தா அவர்களால் அமைக்கப்பட்ட இக்கோயிலில், அமைதியாக பிரார்த்தனை செய்ய ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி, விவேகானந்தர் ஆகியோரின் திருஉருவப் படங்கள் அழகிய மலர் அலங்காரத்துடன் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு இந்திய பண்பாடு- தத்துவம் குறித்த சொற்பொழிவுகள் நடைபெற்றுவருகின்றன. அழகிய நூலகம் அமைந்துள்ளது. ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகள் இங்கு கிடைக்கின்றன.
சிகாகோ நகருக்கு சுவாமி விவேகானந்தரின் வருகை குறித்த நிழற்படங்களும் குறிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்நகரில் உள்ள பெருமாள் கோயிலின் முன்பு விவேகானந்தர் திருஉருவச் சிலை அழகிய மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.