படத்திலிருப்பது யார் என்றறிந்தால் வியந்து போவீர்கள். 1959, டிசம்பர் 6 அன்று பிறந்தார். ஆனால், 11 மாதக் குழந்தையாக இருக்கும்போதே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகளையும், கால்களையும் இழந்தார் இந்த கே.எஸ். ராஜண்ணா.÷மெக்கானிக்கல் பொறியியல் படிப்பில் டிப்ளமோ பெற்றார்.
ஒரு விளையாட்டு வீரராக, மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டு எறிதல் போட்டியில் மலேசியா நாட்டில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார். 2002 இல் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் சூடினார்.
விடா முயற்சியுடனும், சுய நம்பிக்கையுடனும் சுயதொழில் ஒன்றைத் துவக்கினார். அதில் மாற்றுத் திறனாளிகள் 350 பேருக்கு வேலைவாய்ப்பளித்தார்.
இவருடைய சமூக, சமுதாய சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு ஒரு "தேசிய விருது' வழங்கியது.
ஆனால் அசாதாரண நிகழ்ச்சி இவர் வாழ்க்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதியன்று நடந்தேறியது.
இவருடைய மிகச் சிறந்த சேவையைப் பாராட்டி எத்தனையோ விண்ணப்பங்கள் வந்திருந்தாலும் இவரை மாற்றுத் திறனாளிகளின் துறைக்கான "மாநில ஆணையராக' நியமித்தார் முதல்வர் சித்தராமையா. இப் பதவிக் காலம் மூன்றாண்டு. இப்பதவி அரசு செயலர் பதவிக்கு நிகரானதாகும்.
மாநிலத்தில் உள்ள 30 லட்சம் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கிடைத்த ஒரு பதவி போன்று மகிழ்ந்து கொண்டாடினர்.