முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

காரின் சைலன்ஸர் கூட மரத்தில்!

சென்னை போரூர். போக்குவரத்து நெரிசல். அன்று ஏற்பட்ட நெரிசலுக்குக் காரணம், ஒரு கார். அந்தக் காரை வேடிக்கை பார்க்க மக்கள் ஆர்வமாகத் திரண்டதில் போக்குவரத்து நெரிசல்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

சென்னை போரூர். போக்குவரத்து நெரிசல். அன்று ஏற்பட்ட நெரிசலுக்குக் காரணம், ஒரு கார். அந்தக் காரை வேடிக்கை பார்க்க மக்கள் ஆர்வமாகத் திரண்டதில் போக்குவரத்து நெரிசல்.
 காவல்துறையினர் வந்து கூட்டத்தைக் கலைத்து, ""இந்தக் காரை இனிமேல் ரோட்டில் ஓட்டிக் கொண்டு வர வேண்டாம்'' என்கின்றனர்.
 அந்தக் கார் மரத்தால் செய்யப்பட்ட கார். காருக்குச் சொந்தக்காரர் அப்பர் லக்ஷ்மணன். அதை உருவாக்கியவரும் அவரே.
 ""நாங்கள் பரம்பரையாகவே தச்சு வேலை செய்பவர்கள். சென்னை கடம்பத்தூருக்குப் பக்கத்தில் உள்ளது நரசிங்கபுரம். அந்த ஊரில் மாட்டு வண்டிகள் ரொம்ப ரொம்ப ஃபேமஸ். அவற்றைச் செய்து தந்தவர்கள் என் முன்னோர்கள். மாட்டு வண்டியின் சக்கரம் செய்வது என்பது சாதாரண வேலையல்ல. சக்கரத்தின் ஆரக்கால்களைச் சரியாகச் செய்வதற்கு தொழில்நுட்ப அறிவு வேண்டும்.
 நான் ஐடிஐயில் எலக்ட்ரீஷியன் கோர்ஸ் படித்துவிட்டு, அதற்குச் சம்பந்தமில்லாத தச்சுத் தொழிலில் இறங்கியபோது, முதன்முதலில் செய்து பார்த்து, செய்ய முடியாமல் தோற்றது மாட்டு வண்டிச் சக்கரம்தான்.
 ஊரில் உள்ள என் அண்ணன் இறந்துவிட்டார். அவர் ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அந்தச் சைக்கிள் சிலநாட்களில் துருப்பிடித்துவிட்டது. அவர் நினைவாக அந்தச் சைக்கிளைப் பாதுகாக்க நினைத்தேன். எனவே துருப்பிடித்த அந்தச் சைக்கிளின் பல பாகங்களை மரத்தினால் செய்தேன். சைக்கிளின் டயர், ட்யூப், செயின் தவிர எல்லாம் மரத்தில். அந்தச் சைக்கிளை எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
 அதற்குப் பிறகு ஒரு மோட்டார் பைக்கை மர மோட்டார் பைக்காக மாற்றினேன். அதற்கும் நல்ல வரவேற்பு. அப்போதுதான் மரத்தினால் கார் செய்தால் என்ன என்று தோன்றியது. ஒரு பழைய "மாருதி 800' காரை வாங்கி, அதன் இன்ஜின், டயர், ட்யூப் தவிர இதர பாகங்களையெல்லாம் மரத்தினால் செய்து பொருத்தினேன். காரின் சைலன்ஸரைக் கூட மரத்தினால் செய்தேன். காரைச் செய்து ஓட்டிப் பார்த்தபோது பிற கார்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
 இந்த மரக்காரில் மேடு பள்ளங்களில் எல்லாம் செல்லலாம். மணிக்கு 70 கி.மீ. வரை வேகம் செல்லும். ஆனால் இதற்கு ஆர்.டி.ஓ. ஆபிஸில் அனுமதி தர மறுத்துவிட்டனர். இந்தக் கார் உறுதியானதுதானா? என்ற சந்தேகம் அவர்களுக்கு. காரில் உள்ள மரத்திலான போல்ட், நட்களின் தாங்கும் திறன் பற்றி எல்லாம் கேள்வி கேட்டார்கள்.
 என் பாட்டன் காலத்திலிருந்து, மரச்சாமான்களின் வெவ்வேறு பகுதிகளை இணைக்க ஒரு மூங்கில் குச்சியைச் சீவி இறுக்கமாக அடித்துவிடுவார்கள். அதில் தண்ணீர் ஊற்றி வருவார்கள். அப்படி இணைக்கப்பட்ட பகுதியை என்ன செய்தாலும் பிரிக்க முடியாது. பிரிக்க வேண்டும் என்றால் அறுத்துத்தான் எடுக்க வேண்டும். ஆனால் அதன் தாங்குதிறன் பற்றி எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அதனால் இந்தக் காரைப் பயன்படுத்த
 முடியவில்லை.
 நான் மரத்தால் கார் செய்திருப்பதைக் கேள்விப்பட்டு நிறையப் பேர் அதைப் போல செய்து தரக் கேட்டார்கள். ஆனால் காருக்கு லைசென்ஸ் கிடைக்காது என்பதால் பின் வாங்கிவிட்டார்கள். வெளிநாட்டினரும் கேட்டார்கள். அவர்கள் ரோஸ் வுட்டில் கார் செய்து தருமாறு கேட்டார்கள். ரோஸ் வுட் மரத்தை இறக்குமதி செய்வதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருப்பதால் அவர்கள் கேட்டதற்கும் செய்து தர முடியவில்லை.
 கார் ஓடும்போது தீ பிடித்துக் கொள்ளாதா? என்ற சந்தேகம் நிறையப் பேருக்கு. மரத்தில் தீப்பிடித்து எரியாத மரங்களும் உள்ளன. இலுப்பை மரம் காய்ந்தாலும் எரியாது. இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட காரில் நெருப்பை வைத்தாலும் அது பற்றிக் கொள்ளாது.
 இந்தக் கார் ஓடும்போது கலகலத்து உடைந்துவிடாதா? என்று நிறையப் பேர் கேட்பார்கள். இந்தக் காரை கருவேல மரத்தில் செய்து இருக்கிறேன். அது அவ்வளவு எளிதில் உடையாது. ரொம்ப உறுதியானது.
 மரக்கார் உளுத்துப் போய்விட்டால் என்ன செய்வது? என்று நினைப்பார்கள். மரத்தை அறுத்துப் பார்த்தால் அதில் வெள்ளையாக ஒரு பகுதி இருக்கும். அது உளுத்துப் போகும். சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி உளுத்துப் போகாது. எனவே மரக்கார் பற்றி கவலைப்படத் தேவையில்லை'' என்கிறார் அப்பர் லக்ஷ்மணன்.
 அப்பர் லக்ஷ்மணன் தச்சுத் தொழில் தொடர்பாக எட்டு நூல்களை எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்ல, வருங்காலத்தில் தச்சுத் தொழில் நசிந்து, அதைச் செய்ய ஆட்கள் இல்லாமல் போய்விடக் கூடாதே என்பதற்காக சென்னை போரூரில் "விஸ்வ கர்மா வேதிக் ஃபவுண்டேஷன்' என்கிற பெயரில் தச்சுத் தொழிலைக் கற்றுத் தருகிறார்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →