ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
கர திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியிருப்பதாவது...
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், ‘நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டுவந்து உசுப்பிய அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது’ எனக் கூறியுள்ளார்.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள கர திரைப்படம் இன்று (ஏப்.30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தின் மல்லிபாஷியில் ஜீது முண்டா (42) என்பவர், மறைந்த சகோதரியான கலா முந்தாவின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக ஒடிசா கிராமிய வங்கிக்குச் சென்றுள்ளார்.
Advertisement
கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே பணம் தரப்படும் என வங்கி அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். தொடர்ந்து, மூன்று முறை ஜீதுவுக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து, தங்களின் வீட்டருகே புதைக்கப்பட்டிருந்த கலாவின் உடலைத் தோண்டியெடுத்து, எலும்புக் கூட்டுடன் வங்கியில் பணத்தை எடுக்க ஜீது சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷின் கர திரைப்படமும் வருமையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. சிறப்புக் காட்சியைப் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இப்போது தான் “கர” பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும் …கர கொண்டாடப்படும் எனக் கூறியுள்ளார்.