ஆடை வடிவமைப்பும் ஓர் கலைதான்!
புதுமையான டிசைன்கள் என்றால் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் அதிகம். அதனாலேயே 'ஆடை வடிவமைப்பு'
""புதுமையான டிசைன்கள் என்றால் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் அதிகம். அதனாலேயே "ஆடை வடிவமைப்பு' படித்தேன் என்கிறார் சுந்தரி. இருபத்தி நான்கு வயதேயான இவர் ஒன்றரை ஆண்டுகளில் பேசப்படும் நபராக இருந்து வருகிறார். "ஓம் சாந்தி ஓம்', "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', "சவாலே சமாளி' என்று மூன்று திரைப்படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் நடித்தும் இருக்கிறார். மேலும் திரைப்பிரபலங்கள் நடிகர் ஸ்ரீகாந்த், அசோக் செல்வன், காமெடி நடிகர் ஜெகன், பிந்துமாதவி, மிர்ச்சி சிவா, அட்டகத்தி தினேஷ், சந்துரு, மனோபாலா , நாசர், நடிகைகளில் காவ்யாசெட்டி, நீலம் அகர்வால், இஷா தல்வார், ஐஸ்வர்யா தத்தா, அஞ்சலி, ஊர்வசி, என பல பிரபலங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்திருக்கிறார். மேலும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள "பேர்ல்ஸ் அகாதெமி'யில்தான் பேஷன் டிசைனிங் படித்தேன். இது ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான, ஆர்ட் பேஸ்டான கோர்ஸ். ஆடை வடிவமைப்பு மற்றும் ஜுவல்லரி மேக்கிங்கிலும் எனக்கு இருந்த ஆர்வம் படிக்கும் போதே எனக்கு நிறைய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தது.
கல்லூரியில் படிக்கும் போதே என்னுடைய ஒரு சில டிசைன் பேட்டர்னுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கள் கல்லூரியின் தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு சில புராஜக்ட்ஸ் செய்து மாடல்ஸ் வைத்து போட்டோ சூட் செய்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராமன் போன்றவர்களின் பாராட்டு கிடைத்தது மட்டுமல்லாமல் அவர் பணிபுரிந்த போட்டோ சூட்டுக்கு டிசைனிங் ஓர்க் செய்து கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பாரிஸ், இத்தாலி போன்ற நாடுகள்தான் பேஷன் டிசைனிங்கிற்கு முன்னோடி. நமது நாட்டில் தற்போதுதான் பேஷன் டிசைன் அதிகரித்து வருகிறது. கைவேலை, தையற்கலை, பேபரிக் ஓர்க்ஸ், ஜுவல்லரி டிசைன், மேக்கப், ஸ்டைலிங் இதுதான் பேஷன் டிசைனிங்கில் முக்கிய பங்கு வகிக்கும். இது எல்லாம் கற்றுக்கொண்டால்தான் ஒரு முழுமையான பேஷன் டிசைனர் ஆக முடியும். தற்போதைய சூழலில் இந்தத் துறையிலும் போட்டி நிறைய இருக்கிறது. அதிலிருந்து தனித்துவம் பெறுவது அவரவர் திறமையைப் பொறுத்தது.
பேஷன் டிசைனிங் என்று எடுத்துக் கொண்டால் முக்கியமாக பேபரிக் ஒர்க்தான் அதிகம் இருக்கும். ஏனென்றால் பேபரீக்கில் 50க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஆனால் நமக்கு வெளியில் தெரிவது பட்டு சேலை, காட்டன் சேலை, ஜார்ஜட் போன்றவைதான். பேஷன் டிசைனிங் மட்டும் ஒருவரை மாற்றிவிடாது. ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்ற வேண்டும் அப்போதுதான் அந்த மாற்றம் அழகாக இருக்கும்.
பேஷன் டிசைன் ஆடைகளை வசதி உள்ளவர்களே வாங்குவதற்கு காரணம் அதன் விலை. அப்படியில்லாமல் கல்லூரிப் பெண்கள், குழந்தைகள், இல்லத்தரசிகள், குழந்தைகள், டீன் ஏஜ் பெண்கள் என அனைத்து பெண்களுக்கும் ஏற்ற வகையில் நடுத்தர வர்க்கத்தினரும் வாங்கி செல்லும் வகையில் நவீன ஆடைகளைத் தயாரிக்கும் முயற்சியில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
அதுபோல ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றவாறு, விசேஷங்களுக்கு ஏற்றவாறு, பண்டிகைகாலங்களுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்ளும் வகையிலான டிசைன்களையும் உருவாக்கி வருகிறேன். பெரியவர்களை விட குழந்தைகளின் ஆடை வடிவமைப்புதான் மிகவும் கடினம். காரணம் அவர்களை எளிதில் திருப்தி செய்ய முடியாது. அதுபோல குழந்தைகளின் ஆடைகளில்தான் அதிக லாபமும் இருக்கிறது. காரணம் அவர்களுக்கு ஒன்று பிடித்துவிட்டால் அது என்ன விலை என்றாலும் பெற்றோர் வாங்கி கொடுத்துவிடுகிறார்கள். அதனால் குழந்தைகளின் ஆடையில்தான் பிஸினஸ் அதிகம்.
அதே சமயத்தில் குழந்தைகளின் ஆடை தயாரிப்பில்தான் சிரமும் அதிகம், ஏனென்றால் குழந்தைகள் அணிந்து கொள்ளும் ஆடை என்பதால் தரமான துணிகளைப் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டும், அது நல்ல நிறத்தில் கலர்புல்லாக இருக்க வேண்டும். மேலும் அந்தத் துணிவகைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். ஃபேன்சியாகவும் இருக்க வேண்டும், கார்ட்டூன் சித்திரங்கள் இருக்க வேண்டும். பெண்குழந்தைகள் என்றால் அனிமேஷன் கேரக்டர்ஸ் விரும்புவார்கள்.
ஒரு பேஷன் டிசைனராக, பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: பெண்கள் எல்லாருக்குமே டிரஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சமாவது கட்டாயமாக இருக்க வேண்டும். எல்லா வயதினரும் இதை கடைபிடிக்க வேண்டும். திருமணத்திற்கு பின் சில பெண்கள் தங்களை அழகு செய்து கொள்வதையே தவிர்த்து விடுகிறார்கள் இது ரொம்பவும் தவறான முறையாகும். ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள். நாம் என்ன வகையான ஆடை அணிந்து கொள்கிறோமோ அதை வைத்துதான் நமக்கு மரியாதை கிடைக்கும். அதனால் இல்லத்தரசிகளாக இருந்தாலும் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் அழுக்காக எண்ணெய் வடிந்துக் கொண்டு இருக்க கூடாது. அழகான ஆடைகள் அணிந்து கொள்ளும்போது மிடுக்கான தோற்றம் கிடைக்கும். இந்த தோற்றப் பொலிவு அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.
அதுபோல ஆடைகள் என்பது ஒவ்வொருவரின் மனநிலையை வெளிப்படுத்துவது. சிலர் வெள்ளை நிற ஆடைகளையே விரும்பி அணிவார்கள், சிலர் கறுப்பு மற்றும் வெள்ளை கலந்த ஆடைகளை விரும்புவார்கள். டார்க் கலர்ஸ் விரும்பி அணிந்து கொள்பவர்கள் பொதுவாகவே தைரியசாலிகளாக இருப்பார்கள் எதையும் போல்டாக எதிர்கொள்வார்கள், அதுவே மென்மையான கலர்களை விரும்புபவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள். அதனால் எல்லா பெண்களுமே தங்களுக்கென்று ஒரு டிரஸ்ஸிங் ஸ்டைல் உருவாக்கிக் கொண்டால் பார்க்க அழகாகவும், மிடுக்காகவும் தெரியும்.
இளம் பெண்கள் என்றால் ஒரு டியூனிக்ஸýம் அதற்கு ஏற்ற லேகினும் போட்டு கொண்டால் பார்க்க மிக அழகாக இருக்கும். இது எந்த வகையினரும், எப்படிப்பட்ட உடல் அமைப்பு கொண்டவர்களும் வாங்கி அணிந்து கொள்ள வசதியான விலையிலும் கிடைக்கிறது. இன்றைய நவீன ஆடைகளில் புது டிரண்ட் இதுதான். அதனாலேயே பெரும்பாலான பெண்கள் இந்த ஆடைகளை விரும்பி அணிந்து கொள்கின்றனர். காரணம் இதைக் கையாளுவதும் சுலபம்.
அதுபோல ஜீன்ஸ் போட்டுக் கொள்ளும்போது தன் உடலுக்கு ஏற்றவாறு மேல் டாப்பை செலக்ட் செய்து போட வேண்டும் அப்போதுதான் அது அவர்களுக்கு அழகாக இருக்கும். சிலர் நன்கு பருத்து இருப்பார்கள்.
ஆனால் ஜீன்ஸ் போட்டு மேல சின்னதா ஒரு டாப்பும் போட்டுக் கொள்வார்கள். அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. பொதுவாக எல்லா பெண்களுக்கும் பொருந்துவது குர்தாஸýம், லேக்கினும் நன்றாக இருக்கும். எங்காவது பார்டிக்கு செல்வதாக இருந்தால் புல் பிராக் அழகாக இருக்கும்.
பேஷன் டிசைன் படிக்க வேண்டும் என்று ஒரு நடுத்தர குடும்பத்து பெண் கேட்டால், உடனே அவரது பெற்றோர் பேஷன் எல்லாம் நம்ம குடும்பத்திற்கு ஒத்து வராது என்று மறுத்து விடுகிறார்கள். காரணம். பேஷன் என்றாலே குட்டை ஆடை போடுவது, மார்டனாக இருப்பது என்று நினைத்துக் கொண்டு அது ஏதோ தவறான விஷயம் என்று நினைக்கிறார்கள். அப்படியில்லை.
பேஷன் டிசைனிங் என்பது மிகவும் கடினமான படிப்பு, நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். புதிதாக தயாரிக்கும் ஓர் ஆடையை பேஷன் ஷோ மூலமாகதான் காண்பிக்க வேண்டும்.
ஆனால் வெளிநாடுகளோடு ஒப்பிட்டு கொண்டு பார்ப்பது பேஷன் ஷோ மீதே தவறான கண்ணோட்டதை உருவாக்கிவிட்டது.
பேஷன் என்றால் கிளாமர் மட்டும் கிடையாது, டீசண்ட்டாகவும் இருக்கும். அது அவரவர் வடிவமைக்கும் ஆடையைப் பொறுத்தது'' என்றார்.